2026 தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஸ்டாலினே ‘ஜெய்ஸ்ரீராம்' சொல்வார்.. நடப்பதை பாருங்க: அண்ணாமலை
சென்னை: 2026 தேர்தலுக்கு முன் முதல்வர் ஸ்டாலினே, ஜெய் ஸ்ரீ ராம், முருகனுக்கு அரோகரா என சொல்வார். அமைச்சர் சேகர்பாபு அதற்கு அடித்தளம் போட்டுள்ளார். ஒரு அமைச்சர் திமுகவின் ஆட்சி ராமர் ஆட்சியை போல் நடக்கிறது எனக் கூறியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அண்ணாமலை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காவல்துறையை பாராட்டுகிறேன். காங்கிரஸ் கட்சியில் முதன்மையான ஒருவரை சிறைப்பிடித்துள்ளார்கள். யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்துள்ள நடவடிக்கை நம்பிக்கை அளிக்கிறது. கட்சி பேதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை முனைப்பு காட்டுகிறது." எனத் தெரிவித்தார்.

திமுகவுக்கு தெரிஞ்சுபோச்சு: மேலும் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டில் கடவுள் மறுப்புக் கொள்கை வேலைக்கு ஆகாது என திமுகவுக்கு தெரிந்துவிட்டது. எதைச் சொல்லி ஆட்சிக்கு வந்தார்களோ அதையெல்லாம் மாற்ற வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. பாஜகவின் நடவடிக்கை திமுகவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான், பழனி முருகன் மாநாட்டை நடத்துகிறார்கள். அதனை நல்லபடியாக நடத்த வேண்டும்.
ஸ்டாலினே ஜெய்ஸ்ரீராம் சொல்வார்: முருகன் மாநாடு நடத்தும் திமுக அரசு இதே வேகத்தில் சென்றால் 2026 தேர்தலுக்கு முன் முதல்வரே ஜெய் ஸ்ரீ ராம், முருகனுக்கு அரோகரா என சொல்வார். சேகர்பாபு அதற்கு அடித்தளம் போட்டுள்ளார். ஒரு அமைச்சர் திமுகவின் ஆட்சி ராமர் ஆட்சியை போல் நடக்கிறது எனக் கூறியுள்ளார். இதே வேகத்தில் சென்றால் அமைச்சர்களும் ஜெய் ஸ்ரீராம் சொல்லிவிடுவார்கள்." எனக் கூறினார்.
மத்திய அமைச்சருடன் சந்திப்பு: மேலும், தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, மீனவ சங்க பிரதிநிதிகளுடன் சந்தித்து பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தினோம். இந்திய வெளியுறவுத்துறை, மீன்வளத்துறை அதிகாரிகள், இலங்கை வெளியுறவுத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சந்திப்பு விரைவில் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்துள்ளார். மேலும், தமிழக மீனவ சங்கங்கள், இலங்கை மீனவ சங்கங்கள் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்." என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications