உங்கள் வடிவில் தெய்வத்தை பார்க்கிறேன்: முதல்வர் ஸ்டாலினிடம் உறுகிய சிறுமியின் தந்தை: என்ன நடந்தது
தென்காசியைச் சேர்ந்த தம்பதியின் 5 வயது மகள் ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்டதால் குடல் பாதித்து எலும்பும் தோலுமாய் மூன்றில் ஒருபங்கு எடையாக மாறிபோனார். இதைக்கேள்விப்பட்டு சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்து 5 மாத சிகிச்சை அளித்து உயிரைக்காத்து அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியும் அளித்துள்ளார் முதல்வர்.

எழைப்பெற்றோர்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை, மேலூர் வாட்டர் ஹவுஸ் பகுதியில் வசிப்பவர் சீத்தாராஜ்(40) கட்டிடத்தொழிலாளி, இவரது மனைவி பிரேமா(36). பீடி சுற்றும் தொழிலாளி. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும், , இசக்கியமாள் (5) என்ற பெண் குழந்தைகள் உள்ளது. இருவரும் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்கள்.

ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்ட 5 வயது குழந்தை
கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், ஐந்து வயதுச் சிறுமியான இசக்கியம்மாள் வீட்டில் இருந்த பிளீச்சிங் பவுடரை சர்க்கரை என நினைத்து சாப்பிட்டு விட்டார். ஆனால் பெற்றோரிடம் அதுகுறித்து சிறுமி தெரிவிக்கவில்லை. ஆனால் நாளாக ஆக சிறுமியால் சாப்பிட முடியவில்லை, தண்ணீர் குடிக்க முடியவில்லை. இதனால் உடல் எடைக்குறைந்து 18 கிலோவிலிருந்து 6 கிலோ என்கிற அளவிற்கு ஆகிவிட்டார்.

எதுவும் செய்ய முடியாமல் வீட்டுக்கு திரும்பிய பெற்றோர்
ஏழைப்பெற்றோர்களால் குழந்தைக்கு என்ன ஆனது என தெரியவில்லை. நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தபோதுதான் ப்ளீச்சிங் பவுடர் சாப்பிட்டதால் சிறுமியின் குடல் சுருங்கிபோய்விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அங்குள்ள மருத்துவர்கள் அளித்த சிகிச்சையிலும் உடல் நிலை தேறவில்லை. மருத்துவமனையில் தங்கினால் குடும்பம் நடத்த வருமானமில்லாமல் பெற்றோர் சிறுமியை அழைத்துக்கொண்டு வீடு திரும்பி விட்டனர்.

அமைச்சர் மா.சுப்ரமணியத்தின் சீரிய முயற்சி
இசக்கியம்மாளின் நிலை குறித்து ஊடகங்களில் வந்த செய்திகளை பார்த்த சுகாதாரத்துறை அமைச்சர் குழந்தையை சென்னைக்கு சிகிச்சைக்கு அழைத்து வர உத்தரவிட்டார். நேரில் குழந்தையைப் பார்த்து அமைச்சர் பதறிப்போனார். எலும்பும் தோலுமாய் என்கிற வார்த்தைக்கு உதாரணமாக 6 கிலோ எடையுடன் பஞ்சத்தால் வாடிய சோமாலிய குழந்தைபோல் சிறுமி இசக்கியம்மாள் இருந்தார்.
உடனடியாக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்ட அமைச்சர் உரிய தரமான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அவர்கள் தங்க இடமில்லாத நிலையை அறிந்து தனது சட்டமன்ற உறுப்பினர் விடுதி அறையை ஒதுக்கி தங்கிக்கொள்ளச் சொன்னார். அடிக்கடி குழந்தையை அமைச்சர் மா.சுப்ரமணியன் சென்று பார்த்து வந்தார்.

அர்ப்பணிப்புமிக்க எழும்பூர் மருத்துவமனை
அர்ப்பணிப்புமிக்க எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவர்கள், செவிலியர்கள் முயற்சியால் சில மாதங்களில் நல்ல பலன் தெரிந்தது. அவரது சுருங்கிப்போன உணவுக்குழல், குடலை சரி செய்தனர். இதனால் குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பினார். 5 மாதங்களில் உடல் எடைக்கூடி 18 கிலோ எடையை அடைந்தார்.
சிறுமி ஆரோக்கியமாக நல்ல உடல் நலத்துடன் இருந்த நிலை அறிந்த முதல்வர் வாழ்த்தினார். குழந்தையை டிஸ்சார்ஜ் செய்தவுடன் பெற்றோர் முதல்வரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அவர்கள் நிலையை கேட்டறிந்த முதல்வர் அவர்கள் மறுவாழ்வுக்காக 5 லட்ச ரூபாய் நிதியை அளித்தார்.

மனம் நெகிழ்ந்து முதல்வருக்கு நன்றி
என் மகள் பிழைக்க மாட்டாள் எங்களுக்கு இனி யார் இருக்கிறார் என்று கலங்கிய போது ஊடகங்கள் துணை நின்றன, அமைச்சர் அழைத்து காப்பாற்றினார். நீங்கள் சிகிச்சையும் அளித்து குடும்பம் பிழைக்க நிதியும் கொடுத்துள்ளீர்கள், தெய்வத்தை நேரில் உங்கள் வடிவில் பார்க்கிறேன் என நெகிழ்ந்து முதல்வரிடம் நன்றி தெரிவித்தார். அமைச்சர் மா.சுவுக்கும் நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications