பட்டாசாக மாற போகுது பறக்கும் ரயில்கள்.. பிரச்சினைகளை சரி செய்ய புது பிளான்.. சென்னை மெட்ரோ அதிரடி
சென்னை: பறக்கும் ரயில்கள் இப்போது மெட்ரோ வசம் வந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக அங்கு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் மிகச் சிறப்பான பொது போக்குவரத்து நெட்வொர்க்கை கொண்ட நகரமாகச் சென்னை இருக்கிறது. இங்கே பேருந்துகள், புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில், பறக்கும் ரயில்கள் என்று பல வகை பொது போக்குவரத்து இருக்கிறது.

இதில் பறக்கும் ரயில் 1995ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கிறது. அது சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்பட்டு வருகிறது. அதை பரங்கிமலை நீட்டிக்கக் கட்டுமான பணிகள் பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
மெட்ரோ நிர்வாகம்: பறக்கும் ரயில்கள் பல ஆண்டுகளாக இருந்தாலும் கூட அதில் போதிய வசதிகள் இல்லை என்ற புகார் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதன் காரணமாகவே பொதுமக்கள் அதில் பயணிக்க ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கிடையே பறக்கும் ரயில் நெட்வொர்க்கை சென்னை மெட்ரோ நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின.
முதற்கட்ட நடவடிக்கை: இது தொடர்பாகச் சென்னை மெட்ரோ நிர்வாகத்திற்கும் தெற்கு ரயில்வேக்கும் இடையே ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதற்கிடையே பறக்கும் ரயில் நெட்வொர்க்கை மேம்படுத்தச் சென்னை மெட்ரோ நிர்வாகம் முதற்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. இதற்காகச் சென்னை ஐஐடி வல்லுநர்களுடன் மெட்ரோ நிர்வாகம் கை கோர்த்துள்ளது.
முதற்கட்டமாகச் சென்னை ஐஐடி வல்லுநர் குழு திருமயிலை மற்றும் திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நிலையங்களில் ஆய்வு நடத்த உள்ளனர். மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணையாகப் பறக்கும் ரயில் நிலையங்களை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இந்த குழு பரிந்துரைக்கும். பறக்கும் ரயில் நெட்வொர்க்கை சென்னை மெட்ரோ கையகப்படுத்தும் நிலையில், முதற்கட்டமாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஐஐடி குழு ஆய்வு: பயணிகள் வசதியை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை தவிர வருவாய் ஈட்டும் வழிமுறைகள் குறித்தும் ஐஐடி குழு ஆய்வு நடத்தி அறிக்கையைச் சமர்ப்பிக்க உள்ளது. இந்த குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் அனைத்து 17 பறக்கும் ரயில் நிலையங்களையும் மேம்படுத்தப் பரிந்துரைகளை அளிக்க ஒரு தனியார் ஏஜென்சியை நியமிக்கச் சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர் வெளியிடும் எனத் தெரிகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "ரயில் நிலையங்கள் புதுப்பித்து மேம்படுத்தி.. புதிய ஏசி ரயில் பெட்டிகள் வாங்கப்படும் வரை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த பறக்கும் ரயில்களைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே இயக்கும். அதற்கிடையே எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தே இந்த சென்னை ஐஐடி வல்லுநர் குழு பரிந்துரைகளை அளிக்கும்.
அடுத்து என்ன: தானியங்கி முறையில் டிக்கெட் கொடுப்பது, பார்க்கிங், சிசிடிவி கேமரா நெட்வொர்க்கை மேம்படுத்துவது என எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை இந்த குழு வழங்கும். இந்த பறக்கும் ரயில் நிலையங்களை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணையாக மாற்றப் போகிறோம். ஐஐடி குழு ஒரு மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று நினைக்கிறோம். அதன் அடிப்படையில் அனைத்து ஸ்டேஷன்களுக்குமான டெண்டர் விடப்படும்.
நாங்களும் விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்வோம், அதில் பயணிகள் எண்ணிக்கை, 2ஆம் கட்ட மெட்ரோ நெட்வோர்க்குடன் இதை ஒருங்கிணைப்பு, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை ஆகிய விபரங்கள் அதில் இருக்கும். அதைப் பொறுத்து தேவையான நிதியை நாங்கள் அரசிடம் கோருவோம். ஆனால், இதற்கு சில காலம் ஆகும். அதுவரை தெற்கு ரயில்வே தொடர்ந்து ரயில்களை இயக்கும்" என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications