நாக்கை அறுப்பதாக சொல்வதா... அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மநீம புகார்
சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி பிரியதர்ஷினி புகார் மனு அளித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல்ஹாசன் பேசியுள்ளார். அவரது கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். அவரது நாக்கில் சனி. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஊரில் சென்று அவர் பேசி உள்ளார் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார்.
இதற்கிடையே இந்துக்கள் மனம் புண்படும் வகையில் பேசியதாக, கமல்ஹாசனுக்கு எதிராக இந்து சேனா எனும் அமைப்பு டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசன் மீது காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி காவல்நிலையத்தில், கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும்.. எச். ராஜா
அதே வேளையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதும் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெண் நிர்வாகி பிரியதர்ஷினி செம்பியம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இந்தநிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.