திட்டமிட்டு.. சட்டவிரோதமாக மணல் அள்ளிய குவாரிகள்.. உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பரபர விளக்கம்
"பாலாற்றில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 1 மீட்டர் ஆழத்தை விட அதிகமாக பள்ளம் தோண்டி மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது"
சென்னை: மணல் குவாரிகள் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்கும் வகையில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வேலூரில் உள்ள பெருமுகை ஊராட்சி அரும்பருத்தி பகுதியில் பாலாற்றில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதாக கூறி, சமூக ஆர்வலர் கஜராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பாலாற்றில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் 1 மீட்டர் ஆழத்தை விட அதிகமாக பள்ளம் தோண்டி மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க குழு ஒன்றை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவானது, பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், "மணல் குவாரிகளில் மணல் அள்ள பல்வேறு நிபந்தனைகள் விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை கண்டிப்புடன் பின்பற்றப்பட்டும் வருகின்றன. குவாரிகள் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன" என வாதிட்டார்.
இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கையும், மணல் அள்ள நிபந்தனைகள் விதித்த அரசாணையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications