9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 20% இடம்... காங்கிரஸிலிருந்து எழும் குரல்... கப்சிப் திமுக..!
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கு 20% இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக தலைமைக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
கிராம ஊராட்சி தலைவர் பதவி தொடங்கி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி வரை 3 ஆயிரத்து 67 இடங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனிடையே நடைபெறுவது 9 மாவட்டங்களுக்கு மட்டுமான தேர்தல் என்பதால் உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் பகிர்ந்தளிக்கும் பணிகளை மாவட்டச் செயலாளர்கள் வசமே திமுக தலைமை ஒப்படைத்துள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூட, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துபேசி சுமூகமாக முடிவெடுக்க அறிவுறுத்தியிருந்தார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினால் தாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு சீட் கிடைக்காது எனக் கருதிய காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் இதனை கே.எஸ்.அழகிரி கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கின்றனர். இதையடுத்து அறிவாலயம் தரப்பை தொடர்பு கொண்ட சத்தியமூர்த்தி பவன் தரப்பு 9 மாவட்டங்களில் 20% இட ஒதுக்கீடு தேவை எனக் கோரியிருக்கிறது.
காங்கிரஸ் தரப்பில் எழுந்துள்ள இக்கோரிக்கைக்கு திமுகவிடம் இருந்து இன்னும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. தற்போதைய நிலவரப்படி கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட திமுக செயலாளர்கள் தான் பேச்சு நடத்தி வருகின்றனர். வேட்புமனுத் தாக்கல் நிறைவடைய இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ளதால் ஓரிரு நாட்களில் யார் யார் எந்தெந்த பதவிகளுக்கு போட்டியிடுவது என்பது தெளிவாகிவிடும்.
இதனிடையே அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளை கேட்டு தமிழக காங்கிரஸ் கமிட்டி திமுகவுக்கு பெரும் அழுத்தம் கொடுத்தது. 20 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்த திமுக தலைமை, பிறகு டெல்லியில் இருந்து வந்த கோரிக்கை காரணமாக 25 தொகுதிகளை காங்கிரசுக்கு அளித்தது.
இந்நிலையில் இப்போதும் அதேபோல் அதிக இடங்களை கோரி குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது காங்கிரஸ். 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு, தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தல் முக்கியமானது. இதனால் அதனை கருத்தில் கொண்டு இப்போது பிடிவாதத்தை தளர்த்தி திமுகவுடன் காங்கிரஸ் சற்று இணக்கம் காட்டும் எனத் தெரிகிறது.