வாக்காளர்களை ஈர்க்க நிகழ்ச்சி நடத்தினால்.... 2 ஆண்டு சிறை அல்லது அபராதம்... தேர்தல் ஆணையம்
சென்னை: இன்று மாலை 6 மணியுடன், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதனால், தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 19 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளில் 845 பேர் போட்டியிடுகின்றனர். இந்தநிலையில், திரைப்படம், டி.வி, ரேடியோ, சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், வாக்காளர்களை ஈர்க்க நிகழ்ச்சி நடத்தினால், 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரையில் மட்டும் காலை 7 மணி முதல் 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரப்புரை ஓய்ந்ததை அடுத்து, கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட வெளி ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.
அதே போல், மக்களவை தேர்தலையொட்டி புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் தேர்தல் நடத்தும் அதிகாரி அருண். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற இன்று மாலை 6 மணி முதல் வருகிற 19 காலை 9 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.