மீண்டும் மீண்டுமா? ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம்.. கடும் சர்ச்சை!
சென்னை: ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் மீண்டும் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் அச்சிடப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் வள்ளுவர் படம் அச்சிப்பட்டுள்ளதற்கு தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திருவள்ளுவர், கவிஞர்கள் கபீர் தாஸ், யோகி வேமனா குறித்த சர்வதேச கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த சர்வதேச கருத்தரங்கம் தொடர்பான ஆளுநர் ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மீண்டும் காவி உடையுடன் வள்ளுவர் படம் அச்சிடப்பட்டுள்ளதால் தமிழ் ஆர்வலர்கள் கொந்தளித்துள்ளனர்.
தமிழ்ச் சமூகத்தை ஆளுநர் புண்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து மத அடையாளமாக முன்னிறுத்தும் வேலையை ஆளுநர் தொடர்ந்து செய்து வருவதாகவும், இந்துத்வா அரசியலை பிரச்சாரப்படுத்தும் பணியில் ஆளுநர் மாளிகை பிரதான இடமாக இருக்கிறது என்றும் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
திருவள்ளுவரை அவர்கள் சார்ந்த அரசியலுக்கு பயன்படுத்த துடிக்கின்றனர். மதம் சாதி சார்ந்த வெறுப்பு அரசியலுக்கு திருவள்ளுவர் படத்தை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்று எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட 'திருவள்ளுவர் திருநாள் விழா' அழைப்பிதழில் வள்ளுவர் காவி உடையில், பூணூல் அணிந்திருந்தது போன்ற படம் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதற்கு பல்வேறு தலைவர்களும், தமிழ் அமைப்புகளும் கண்டனத்தைப் பதிவு செய்து இருந்தனர்.
அதற்கு முன்பும் திருவள்ளுவர் தினத்தன்று தமிழக ஆளுநர் ரவி, "ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையைச் செலுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டார். அவரது பதிவில் காவி நிறம் கொண்ட திருவள்ளுவர் பட்டத்தையும் பதிவிட்டிருந்தார். அப்போதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடும் எதிர்ப்பை அடுத்து, காவி உடையுடன் பதிவிட்ட வள்ளுவர் படத்தை ஆளுநர் மாளிகை நீக்கியது.












Click it and Unblock the Notifications