கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி
சென்னை: அவசர காலத்தில் கை கொடுத்து உதவக்கூடிய கூட்டுறவு வங்கிகளில், வாங்கிய நகைக்கடனை திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடு என்ன, என்னென்ன வழிகளில் பணத்தைச் செலுத்தலாம், ஒருவேளை பணம் கட்டத் தவறினால் ஏலத்திற்குச் செல்லும் நகையை எப்படிப் புதுப்பித்து மீட்பது என்பது குறித்து அறிந்து வைத்து கொள்வது நல்லது. அவைகளைப் பற்றி இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்...!!
அவசர தேவைக்காக கையிலுள்ள தங்க நகைகளை அடகு வைக்க நினைக்கும் போது, பெரும்பாலோரின் முதல் தேர்வு கூட்டுறவு வங்கிகளாகத்தான் இருக்கிறது. இதற்கு காரணம், மிக குறைந்த வட்டி, நம்பகத்தன்மை எனப் பல சாதகங்கள் இதில் இருப்பதால், நடுத்தரக் குடும்பங்கள் தங்களின் அவசர பணத் தேவைக்கு கூட்டுறவு வங்கிகளை நாடுகிறார்கள்.

நகையை அடகு வைத்துப் பணம் வாங்குவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் அந்த நகையை எப்படி, எப்போது மீட்கப் போகிறோம் என்பதுதான்.
ஏலத்தொகை
பொதுவாக, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன்களுக்கு ஓராண்டு காலம், அதாவது 12 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. அதாவது நகையை அடகு வைத்த நாளில் இருந்து ஒரு வருடத்திற்குள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். சில குறிப்பிட்ட குறுகிய காலக் கடன்களுக்கு 6 மாத காலம் மட்டுமே அவகாசம் தரப்படும்.
அதனால் சம்பந்தப்பட்டவர்கள், கடனை பெறும்போது உங்களுக்கான கால வரம்பு 6 மாதங்களா அல்லது ஒரு வருடமா என்பதை வங்கியிலேயே தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. இந்த நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் கடனை அடைக்கத் தவறினால், வட்டி விகிதம் அதிகரிப்பதோடு நகைகள் பொது ஏலத்திற்குச் செல்லும் மிகப்பெரிய அபாயமும் ஏற்படும்.
கூட்டுறவு வங்கி நகைக்கடன்
பணத்தை திருப்பி செலுத்துவதில் வாடிக்கையாளர்களுக்குப் பெரும் சுமை தெரியாத வகையில் கூட்டுறவு வங்கிகள் சில எளிய வழிமுறைகளை வழங்குகின்றன. தனியார் நிதி நிறுவனங்களை போல மாதாமாதம் குறிப்பிட்ட தொகையைத் தவணையாக அதாவது EMI கட்ட வேண்டும் என்ற கட்டாயம் கூட்டுறவு வங்கிகளில் இல்லை. நீங்கள் நினைத்தால், ஒரு வருடம் கால அவகாசம் முடியும் நாளில் ஒட்டுமொத்த அசல் தொகையையும், அதற்கான வட்டியையும் சேர்த்து ஒரே தவணையாக செலுத்தி நகையை மீட்டுக்கொள்ளலாம்.
அதேபோல இன்னொரு வசதியும் இதில் உள்ளது. அதாவது ஒரு வருடக் காலத்திற்குள் உங்களின் கையில் எப்பொழுதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்பொழுதெல்லாம் பகுதி பகுதியாக அசல் அல்லது வட்டித் தொகையை வங்கியில் செலுத்தி வரவு வைத்துக் கொள்ளலாம். இதனால் கடனின் சுமை படிப்படியாகக் குறையும்.
நகைக்கடன் வாங்கியோருக்கு குட்நியூஸ்
இங்குதான் நகைக்கடன் வாங்கியோருக்கு ஒரு சூப்பர் குட் நியூஸ் மற்றும் ஈஸி வழி காத்துக்கொண்டிருக்கிறது. ஒருவேளை ஓராண்டு காலம் முடிந்த பிறகும் உங்களால் முழுப் பணத்தையும் செலுத்தி நகையை மீட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், நகையை ஏலத்திற்கு விட்டுவிடுவார்களோ என்று கவலைப்படத் தேவையில்லை. அதற்கும் ஒரு சூப்பர் வழி இருக்கிறது, அதுதான் கடனைப் புதுப்பித்தல் செய்யும் முறை.
இதன்படி நீங்கள் வாங்கிய நகைக்கடனுக்கான ஓராண்டு கால வட்டித் தொகையை மட்டும் முழுமையாகக் கணக்கிட்டு வங்கியில் செலுத்திவிட வேண்டும்.
அதுமட்டுமின்றி, அன்றைய தேதியில் தங்கத்தின் சந்தை மதிப்புக்கு ஏற்ப நகையை மறுமதிப்பீடு செய்வார்கள். இதன் மூலம் பழைய கடனை முடித்துவிட்டு, அதே நகைக்கு புதிய கடனாக மாற்றி, நகையை ஏலப் பட்டியலிலிருந்து தடுத்து மேலும் ஒரு வருட காலத்திற்கு அவகாசத்தை நீட்டித்துக் கொள்ளலாம். இதற்கு நகையின் உரிமையாளர் நேரில் சென்று புதிய விண்ணப்பத்தில் கையெழுத்திட வேண்டியது அவசியமாகும்.
நகைக்கடன் - வட்டித் தொகை
மொத்தத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்குவது எவ்வளவு சுலபமோ, அதை திருப்பி செலுத்துவதும் அவ்வளவு எளிதானதுதான். உங்கள் கையில் மொத்தமாக பணம் இருந்தால் ஒரே தவணையில் மீட்கலாம், இல்லாவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்து பகுதியாக செலுத்தலாம்.
ஒரு வருடத்திற்குள் மீட்க முடியாத பட்சத்தில், வட்டித் தொகையை மட்டும் கட்டிவிட்டு கடனை மேலும் ஓராண்டிற்குப் புதுப்பித்துக் கொண்டு நகையை ஏலத்திற்குப் போகாமல் ஈஸியாகக் காப்பாற்றிக் கொள்ளலாம். இந்த எளிய வழிமுறைகளை சரியாக புரிந்துகொண்டு செயல்பட்டால், நம்முடைய அவசரத் தேவையும் பூர்த்தியாகும், குடும்பத்து தங்கமும் பாதுகாப்பாக நம்முடைய கைகளுக்கே வந்து சேரும்...!!












Click it and Unblock the Notifications