கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா.. தமிழகத்தில் 3ஆவது நாளாக 1000க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,289 பேருக்கு வைரஸ் பாதிப்பு, ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தலைநகர் சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தேர்தல் காலம் என்பதால் பிரசாரத்தில் அதிகளவிலான மக்கள் முறையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் ஒரே இடத்தில் ஒன்று கூடுகின்றனர். இதன் காரணமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
3ஆவது நாளாக 1000 கடந்த வைரஸ் பாதிப்பு
தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வெளிமாநிலங்களிலிருந்து திரும்பிய ஒன்பது பேர் உட்பட 1,289 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,66,982 ஆக அதிகரித்துள்ளது.
அதிகரிக்கும் உயிரிழப்பு
அதேபோல நேற்று ஒரே நாளில் மட்டும் சிகிச்சை பலனிற்றி ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா காரணமாக இதுவரை 12,599 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் தற்போது 7,903 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 75,258 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
668 பேர் டிஸ்சார்ஜ்
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 668 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்றில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,46,480ஆக உயர்ந்துள்ளது. ஒரு புறம் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அதேநேரம், கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தலைநகர் சென்னை
அதிகபட்சமாகத் தலைநகர் சென்னையில் 466 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 257 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து செங்கல்பட்டில் 138 பேருக்கும் கோவையில் 109 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தஞ்சையில் 73 பேருக்கும் திருவள்ளூரில் 72 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.