கொரோனா தடுப்பு நடவடிக்கை.. முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்குக.. மக்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: கொரோனா பரவலை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் நிதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா கேஸ்கள் 23 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தற்போது வரை தமிழகத்தில் 14,09,237 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 15880 பேர் பலியாகி உள்ளனர். 1,52,389 பேர் சிகிச்சைபெறும் நோயாளிகளாக உள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு எதிரான அரசின் முயற்சியில் மக்களும் கரம் கோர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் நிதி வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது மக்கள், சமூக சேவை அமைப்புகள், நிதி நிறுவனங்கள் முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி கொடுத்து உதவலாம். நேரடியாக முதல்வரிடமோ, அதிகாரிகளிடமோ, அமைச்சர்களிடமோ நிதி கொடுக்க கூடாது.
முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி கொடுக்கலாம். தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நன்கொடைகளுக்கு 100% வருமான வரி அளிக்கப்படும். வெளிநாட்டில் இருந்து நிதி அளிப்பவர்களுக்கும் இதேபோன்று வரி விலக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.
ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதியுதவி தருபவர்கள் பெயர்கள் பத்திரிகையில் வெளியிடப்பட்டு பாராட்டப்படும்.பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். நன்கொடை - செலவினங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள வங்கி விவரத்தின்படி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேமிப்புக் கணக்கு எண் - 117201000000070, IFSC - IOBA0001172 என்ற வங்கி கணக்குக்கு நிவாரண நிதியை மக்கள் வழங்கலாம்.
tncmprf@iob என்ற UPI IDஐ பயன்படுத்தியும் கொரோனா நிவாரண நிதியை வழங்கலாம். http://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணையதளம் மூலமாக நிதியை செலுத்தலாம்.