ஓமிக்ரான் ஆபத்து.. சிக்னல் தந்த மத்திய அரசு.. தமிழ்நாட்டில் இரவு நேர லாக்டவுன்? என்ன நடக்கும்?
சென்னை; ஓமிக்ரான் பரவல் இந்தியா முழுக்க அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இரவு நேர லாக்டவுன் மற்றும் வேறு சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு 213 ஆக உயர்ந்துள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் ஓமிக்ரான் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் நாடு முழுக்க ஓமிக்ரான் பரவல் 2 மடங்கு அதிகரித்துள்ளது.
ஒரே வாரத்தில் இரண்டு மடங்கு கேஸ்கள் பதிவாகி உள்ளது. டெல்டாவை விட இது 3 மடங்கு வேகமாக பரவுவதாக மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இப்போது வரை 1 கேஸ் மட்டுமே பதிவாகி உள்ளது.

மத்திய அரசு
இந்த நிலையில்தான் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வர விருப்பம் இருந்தால் கொண்டு வரலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இரவு நேர லாக்டவுன் கொண்டு வர வேண்டும். கட்டுப்பாட்டை அதிகரிக்க வேண்டும்.

கடிதம்
கூட்டங்களை கண்காணிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த கடிதம் இரவு நேர லாக்டவுன் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கொடுத்த கிரீன் சிக்னலாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு
இதனால் தமிழ்நாட்டில் இரவு நேர லாக்டவுன் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சுகாதாரத்துறை வட்டாரத்தில் விசாரித்த வரை இப்போதைக்கு இரவு நேர லாக்டவுன் வராது. ஆனால் தீவிர கண்காணிப்புகள் நடக்கும். புத்தாண்டு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் வராது. அதன்பின் ஓமிக்ரான் கேஸ்கள் பதிவானால் வேண்டுமானால் கட்டுப்பாடுகள் வர வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

பேட்டி
இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் ஏற்கனவே 1 ஓமிக்ரான் கேஸ் பதிவானது. அவர் நல்ல உடல்நிலையில் இருக்கிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதேபோல் 48 நபர்களுக்கு ஓமிக்ரான் அறிகுறி இருந்தது. இவர்களுக்கு எஸ் ஜீன் இல்லை. இவர்கள் எல்லோரையும் கண்காணித்து வருகிறோம்.

கொரோனா வெளிநாடு
தமிழ்நாட்டில், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 104 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ரிஸ்க் நாடுகளில் இருந்து வந்த 48 நபர்களின் பரிசோதனை முடிவுகள் விரைவில் வரும். ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடியது என்ற போதிலும், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

ஓமிக்ரான்
இப்போதைக்கு ஓமிக்ரான் பரவி உள்ள இடங்களில் மட்டுமே கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படும். மற்ற இடங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனால் இப்போதைக்கு தமிழ்நாட்டில் பெரிய அளவில் இரவு நேர லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் வர வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications