சென்னையில் நாய் கடித்து தம்பதி காயம்.. தொடர்ந்து வரும் நாய்க்கடி சம்பவங்களால் மக்கள் பீதி!
சென்னை: சென்னை சூளைமேடு பகுதியில் நாய் கடித்து தம்பதியர் காயமடைந்துள்ளனர். சென்னையில் நாய் கடித்து காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு சர்புதீன் தெருவில் கடைக்குச் சென்றுவிட்டு திரும்பி வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்த நீலா, அவரது கணவர் பெயிண்டர் சுரேஷ் ஆகியோரை நாய் கடித்ததில் இருவரும் காயமடைந்தனர். மல்லிகா என்பவர் வளர்த்து வரும் நாய் தெருவில் சென்றபோது கடித்ததாக சூளைமேடு காவல் நிலையத்தில் நீலா புகார் அளித்துள்ளார்.

நாய் குரைத்ததைப் பார்த்ததும் நீலா, அந்த நாயின் உரிமையாளர்களிடம் சொன்னபோது, அவர்கள் கடிக்காது என்று கூறியுள்ளனர். ஆனால், நாய் விரட்டி வந்து நீலாவை கடித்துள்ளது. நீலா அலறும் சத்தம் கேட்டு அவரை காப்பாற்ற வந்த அவரது கணவர் சுரேஷையும் கடித்துள்ளது. நாய் கடித்து காயம் அடைந்த நீலா மற்றும் கணவர் சுரேஷ் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை கடந்த 5ஆம் தேதி இரண்டு நாய்கள் கடித்து குதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலத்த காயமடைந்த அச்சிறுமி ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் சிறுவன் ஒருவரை நாய் கடித்தது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை, அப்பகுதியில் உள்ளவர் வளர்க்கும் வெளிநாட்டு வகை நாய் விரட்டி கடித்தது. இதேபோல, நாவலூர் பகுதியில் 10 மாத குழந்தையை பொமேரியன் நாய் ஒன்று கடித்தது.
சென்னையில் நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வளர்ப்பு நாய்களால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் நாய் இருக்கும் பகுதிகளுக்குச் செல்லவும், குழந்தைகளை அனுப்பவும் அஞ்சி பீதி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications