ராமதாஸ் பெயர், போட்டோவை பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை - சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தேர்தல் பரப்புரையில் ராமதாஸ் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை விதித்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் காலத்திற்கும் பொருந்தும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு, ஜூன் 4 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், ராமதாஸ் அணி மற்றும் அன்புமணி அணி என இரு அணிகளாகப் பிரிந்து, இரு வேறு துருவங்களாகச் செயல்பட்டுத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அன்புமணி தரப்பு பாமக, அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோர் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றனர்.

பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடைவிதிக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த புதிய வழக்கில், அன்புமணி ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் 18 பேருக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக்கோரியும், கட்சியின் தலைவராக தம்மை அறிவிக்கக்கோரியும் ராமதாஸ் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை ராமதாஸ் தொடர்ந்த இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை 13வது உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள புதிய வழக்கில், அன்புமணி ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும் தனக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பாமக தலைவராக சட்ட விரோதமாக அன்புமணி ராமதாஸ் நீடித்து வருவதாகவும் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும் பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார் ராமதாஸ். இந்த வழக்கில், அன்புமணி ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் 18 பேருக்கும் சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தேர்தல் பரப்புரையில் ராமதாஸ் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை விதித்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் காலத்திற்கும் பொருந்தும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு, ஜூன் 4 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications