"முதலில் சரண் அடையுங்கள்".. முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு.. எம்பி ரமேஷ் சரண்டரான பின்னணி!?
சென்னை: பண்ருட்டி முந்திரி ஆலையில் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக எம்பி ரமேஷ் இன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். திமுக தலைமை போட்ட உத்தரவை அடுத்தே இவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததாக தகவல்கள் வருகின்றன.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோவிந்தராஜ் என்ற நபர் திமுக எம்பி டிஆர்வி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். கடந்த செப்டம்பர் 19ம் தேதி இவர் மர்மமான முறையில் உடலில் காயங்களோடு மரணம் அடைந்தார்.
எம்பி ரமேஷுக்கு சொந்தமான டிஆர்வி முந்திரி ஆலையில் கடந்த 6 வருடமாக கோவிந்தராஜ் பணியாற்றி வந்த நிலையில் திடீரென மரணம் அடைந்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. கோவிந்தராஜ் பாமகவை சேர்ந்தவர் என்பதால் அவரின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பாமகவினர் கடந்த மாதம் போராட்டம் நடத்தினர்.

பாமக கோரிக்கை
அதோடு இந்த வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். கோவிந்தராஜ் உடலில் காயங்கள் இருந்ததாகவும் திமுக எம்பி டிஆர்வி ரமேஷ் மற்றும் அவரின் ஆட்கள்தான் கோவிந்தராஜை கொலை செய்ததாகவும் கோவிந்தராஜின் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

கோரிக்கை
கோவிந்தராஜின் உறவினர்கள் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். அவரின் உடலை பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படியே கோவிந்தராஜ் உடல் நான்கு ஜிப்மர் மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. இந்த வழக்கு பெரிய சர்ச்சையான நிலையில் உடனே வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

வேகம் எடுத்தது
சிபிசிஐடி நேற்று முதல்நாள் இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரிடம் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் கடலூர் எம்பி ரமேஷ் மற்றும் முந்திரி தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் 5 பேர் மீது சிபிசிஐடி கொலை வழக்கு உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் எம்பி ரமேஷ் தவிர மற்றவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று கடலூர் கிளை சிறைச்சாலையில் ரிமாண்ட் செய்யப்பட்டனர்.

கைது
சிபிசிஐடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை துரிதமாக விசாரித்து வந்தனர். இதில் எம்பி ரமேஷ் மட்டும் கைது செய்யப்படாமல் இருந்தார். நேற்று இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 5 பேரும் கைது செய்யப்பட்டதால் எம்பி ரமேஷ் எப்படியும் இன்று கைது செய்யப்பட்டுவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக இன்று எம்பி ரமேஷ் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

சரண்
பண்ருட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் எம்பி ரமேஷ் சரண் அடைந்தார். பொறுப்பு நீதிபதி கற்பகவள்ளி முன்னிலையில் எம்பி ரமேஷ் சரண் அடைந்த நிலையில் நீதிமன்ற காவலில் ரமேஷை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். திமுக தலைமை போட்ட உத்தரவை அடுத்தே இவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்ததாக தகவல்கள் வருகின்றன.

என்ன எதிர்பார்க்கப்பட்டது?
திமுக எம்பி ரமேஷ் எப்படியும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பார் என்றே கருதப்பட்டது. கைது செய்யப்படும் முன் முன் ஜாமீன் வாங்கிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. முன் ஜாமீன் வாங்கி வழக்கை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரமேஷ் இன்று திடீரென சரண் அடைய தலைமை போட்ட உத்தரவு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. நீங்கள் நீதிமன்றத்தில் சரண் அடைவதுதான் சரி என்று திமுக மூத்த தலைவர்களும், முதல்வர் ஸ்டாலினும் உத்தரவிட்டதாக தெரிகிறது.

திமுக கூட்டம்
நேற்று முதல் நாளே முதல்வர் ஸ்டாலின் திமுக மூத்த உறுப்பினர்களுடன் இது தொடர்பாக ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. கட்சி ரீதியாக என்ன முடிவு எடுப்பது என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையின் முடிவில்தான் திமுக எம்பி ரமேஷ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அவருக்கு உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

திமுக தலைமை அழுத்தம்
நீங்கள் வழக்கை முறையாக எதிர்கொள்ள வேண்டும். முன் ஜாமீன் பெறும் வரை காத்திருக்க வேண்டாம். தவறு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தில் நிரூபியுங்கள். இப்போது உங்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதை முறையாக நீதிமன்றத்தில் சரண் அடைந்து எதிர்கொள்ளுங்கள். தவறான முன்னுதாரணம் எதையும் நீங்கள் காட்டிவிட கூடாது என்று முதல்வர் தரப்பு எம்பி ரமேஷுக்கு அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. கட்சியில் ரமேஷுக்கு நெருக்கமான மற்ற மூத்த தலைவர்களும் ஆளும் கட்சி என்பதால் வழக்கில் இருந்து தப்பிக்கலாம் என்று நினைப்பது கட்சிக்கு எதிராக திரும்பும்.. சட்டப்படி செயல்படுங்கள் என்று அறிவுறுத்தியதாக தகவல்கள் வருகின்றன.

அவர் தரப்பு கருத்து
நீங்கள் விரும்பினால் உங்களின் தனிப்பட்ட கருத்தை, உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லலாம் என்று திமுக எம்பி ரமேஷுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்தே நீதிமன்றத்தில் ஆஜரான ரமேஷ், என் மீது எந்த தவறும் இல்லை. நான் குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபிப்பேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளனர். இதை சட்டப்படி முறியடிப்பேன். என் தலைவர் நல்லாட்சியின் மீது வீண்பழி வீசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்திட கூடாது என்று நினைக்கிறேன். கண்டிப்பாக விரைவில் நான் சட்டப்படி வெளியே வருவேன் என்று தனது தரப்பு கருத்தை எம்பி ரமேஷ் குறிப்பிட்டார்.

ஞானதிரவியம் வழக்கு
கட்சி தலைமை இந்த விஷயத்தில் மிகவும் கறாராக இருந்த நிலையில்தான் எம்பி ரமேஷ் முன் ஜாமீன் பற்றி யோசிக்காமல் நேரடியாக சரண் அடைந்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இவர் மட்டுமின்றி பா.ஜ.க நிர்வாகியை தாக்கியதாக தி.மு.க எம்.பி ஞானதிரவியம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்கிணறு விலக்கில் ஹோட்டல் ஓன்றில் பா.ஜ.க நிர்வாகி பாஸ்கரன் என்பவர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது தி.மு.க எம்.பி ஞானதிரவியம் மற்றும் அவரது ஆட்கள் பாஸ்கரனை தாக்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.

வழக்கு
இதில் திமுக எம்பி என்றெல்லாம் பார்க்காமல் காவல்துறை கண்டிப்புடன் நேர்மையாக செயல்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. யாராக இருந்தாலும் சட்டப்படி புகாரை எதிர்கொள்ளட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தரப்பு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஞானதிரவியம் மீது உடனடியாக வழக்கு பதியப்பட்டது என்கிறார்கள். கட்சி தலைவர்கள், நிர்வாகிகளுக்கு இது பாடமாக இருக்கட்டும்.

கட்சிகளுக்கு பாடம்
தவறு செய்தால் யாராக இருந்தால் நடவடிக்கை, சட்டப்படிதான் எல்லாம் நடக்கும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை கொடுத்த மெசேஜ் இது என்று கூறுகிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கும் இது பதிலடியாக மாறியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனைகளை பெரிதாக்கி அரசியல் செய்ய விடாமல் துரிதமாக செயல்பட்டு திமுக தரப்பு இதில் ஆக்சன் எடுத்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் இதில் திமுகவிற்கு எதிராக இதுவரை அழுத்தம் கொடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications