காவல்நிலையத்தில் ஓபிஎஸ் தரப்பு "பதிலடி.." யார் சொன்னா திருடு போச்சுன்னு? அடுக்கிய ஜே.சி.டி!
சென்னை : அதிமுக தலைமை கழகத்தை தகர்க்க குண்டர்களை ஏவியதாக எடப்பாடி பழனிசாமி மீது ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட நிலையில், முக்கிய ஆவணங்களை கொள்ளை அடித்ததாக ஓபிஎஸ் மீது ஈபிஎஸ் தரப்பினர் புகார் அளித்தனர்.
இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகர், எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகம்
கடந்த ஜூலை 11ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றபோது, ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் கடும் சேதங்கள் ஏற்பட்டன. இருதரப்பினரும் மாறி மாறி நடத்திய கல் வீச்சில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அதிமுக அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தார். இந்த சீலை அகற்றி அலுவலகத்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் இருதரப்பினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.

எடப்பாடி வசம்
இதனையடுத்து, அதிமுக தலைமை அலுவலக சாவி, தலைமைக் கழக மேலாளரும், ஈபிஎஸ் ஆதரவாளருமான மகாலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி, மகாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் அலுவலகத்திற்குள் சென்று பார்வையிட்டனர். பின்னர், அலுவலகத்தின் அறைக் கதவுகள் உடைக்கப்பட்டு, ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன, அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை காணவில்லை, ஜெயலலிதாவுக்கு பல்வேறு காலகட்டங்களில் நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட செங்கோல், வெள்ளி வேல் ஆகியவற்றையும் ஓபிஎஸ் தரப்பினர் திருடிச் சென்றுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.

போலீசில் புகார்
இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கடந்த சனிக்கிழமையன்று புகார் அளித்தனர். அவர்களது புகாரில், அதிமுக அலுவலகத்தில் இருந்த பொருட்கள், ஆவணங்களை ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதிமுக தலைமை அலுவலக அசல் பத்திரங்களை காணவில்லை, அவற்றை கொள்ளையடித்துச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என போலீசில் புகார் அளித்தனர்.

ஓபிஎஸ் தரப்பு புகார்
இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான ஜே.சி.டி.பிரபாகர் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் மீது புகார் ஒன்றை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அந்த புகாரில் ஜூலை 11ஆம் தேதி ஓ.பி.எஸ் உட்பட பலர் வழக்கமாக கட்சிப் பணியாற்றிட தலைமை கழகத்திற்கு தொண்டர்களுடன் சென்றபோது எடப்பாடி பழனிசாமியின் தூண்டுதலின் பேரில் தி.நகர் சத்யா, விருகம்பாக்கம் வி.என்.ரவி, எம்.கே.அசோக், ஆதிராஜாராம் ஆகியோர் குண்டர்களுடன் கத்தி, கற்கள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு தலைமை அலுவலகத்திற்குள் செல்ல விடாமல் எங்களை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து ரவுடிகள் சிலர் தலைமை கழகத்தின் உள்கதவை பூட்டியதால் தொண்டர்கள் கதவை திறந்து, ஓ.பன்னீர்செல்வத்தை அறைக்குள் பத்திரமாக கொண்டு சென்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

காழ்ப்புணர்ச்சி
இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தலைமை கழகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களைத் தூக்கி வீசி, வாகனங்களை அடித்து உடைத்தனர். இதனால் தொண்டர்கள் சிலர் முக்கிய ஆவணங்களை ஓபிஎஸ் வந்த வாகனத்தில் பாதுகாப்பாக வைத்தனர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உண்மைக்கு புறம்பான புகார் ஒன்றை கொடுத்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. அதில் சில ஆவணங்களை குறிப்பிட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் அவரோடு வந்த கழக மூத்த நிர்வாகிகள் பெயரை குறிப்பிட்டு அவர்கள் திருடிச் சென்றதாக புகார் கூறியுள்ளார். அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை, அது காழ்ப்புணர்ச்சியோடு கொடுக்கப்பட்ட புகார் எனத் தெரிவித்துள்ளார்.

பத்திரமாக இருக்கிறது
மேலும், தலைமை கழகத்தில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை மேலாளர் மகாலிங்கம் மற்றும் துணை மேலாளர் மனோகரன் ஆகியோர் திருடியுள்ளனர். ஜெயலலிதா காலத்திலிருந்தே முக்கிய ஆவணங்கள் மற்றும் இருப்புத் தொகையை தலைமை கழகத்திற்குள் வைப்பதில்லை. கழக சொத்துக்களை பாதுக்காக்கும் பொருட்டு இந்த முடிவு அம்மா காலத்திலேயே எடுக்கப்பட்டது. கழக வாகனங்களின் ஆவணங்கள் மேளாலர் மகாலிங்கம் வசம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த ஆவணங்களை ஈபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்த குண்டர்கள் தூக்கி வீசிய போது கழகத் தொண்டர்கள் கைப்பற்றி பாதுகாக்க வேண்டி ஒருங்கிணைப்பாளரின் வாகனத்தில் ஒப்படைத்தனர் எனத் தெரிவித்துள்ளார்.

தேவர் தங்க கவசம்
தேவர் திருமகனார் தங்க கவசம் வைத்துள்ள வங்கியின் பாதுகாப்பு பெட்டக ஆவணம் ஜெயலலிதாவால் கழக பொருளாளரும் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேவர் திருமகனார் குடும்ப வாரிசு இணைந்தே செயல்படுத்தும் விதமாக மதுரையில் உள்ள வங்கியில் கணக்கு ஏற்படுத்தி அசல் ஆவணத்தை கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடமே கொடுத்து வைத்திருந்தார். அது தற்போது ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வசமே உள்ளது.

நடவடிக்கை எடுக்கவேண்டும்
ஓபிஎஸ் மற்றும் நாங்கள் இணைந்து தலைமை கழக சொத்துக்களை திருடி விட்டதாக சி.வி.சண்முகம் புகார் அளித்திருப்பது முற்றிலும் பொய்யானது, குண்டர்களை ஏவி தலைமை கழகம் மற்றும் வாகனங்களை சேதப்படுத்த தூண்டிய எடப்பாடி பழனிச்சாமி, பொய் புகார் அளித்த சி.வி.சண்முகம், கொலைவெறி தாக்குதல் நடத்திய ஆதிராஜாராம் உள்ளிட்டவர்கள் பலர் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் ஜே.சி.டி.பிரபாகர் குறிப்பிட்டுள்ளார்.
-
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
ஓ.பன்னீர்செல்வத்திடம் ஏடாகூட கேள்வி.. சட்டென டென்ஷனான பெரியகருப்பன் -
அதிமுக கதை குளோஸ்.. விஜய் வீட்டு கதவை தட்டும் எடப்பாடி பழனிசாமி.. பங்கப்படுத்திய பன்னீர்செல்வம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல்












Click it and Unblock the Notifications