சவுக்கு சங்கரை 5 நாள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் பிளான்.. கோர்ட்டில் மனு
சென்னை: நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்குமாறு சைபர் கிரைம் போலீசார் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், அண்மையில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் காவல்துறை அதிகாரிகள் குறித்து தரக்குறைவான கருத்துகளை பயன்படுத்தினார். மேலும் பெண் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான அவதூறான கருத்துகளை தெரிவித்து இருந்தார். சவுக்கு சங்கரின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையையும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூக வலைத்தளத்திலும் பரவியது. சவுக்கு சங்கரின் பேட்டிக்கு காவல்துறை அதிகாரிகள், மகளிர் போலீசார் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டி குறித்து, கோவை சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின்பேரில், சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சவுக்கு சங்கரை கைது செய்ய சைபர் கிரம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த போலீசார் கோவைக்கு அழைத்து வந்தனர். சவுக்கு சங்கர் மீது இந்திய தண்டனை சட்டம் 293 (பி), 509 மற்றும் 353 ஐபிசி ஆர்/டபிள்யூ பிரிவு 4 தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு பிரிவு 67 உள்ளிட்டவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதாவது தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்டவை தான் அந்த பிரிவுகளாகும். அதன்பிறகு அவர் கோவை அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவரை, கோவை 1-வது ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
சவுக்கு சங்கரை வரும் 17 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, சவுக்கு சங்கர் உதவியாளர் மற்றும் கார் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது அந்த காரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கஞ்சா வைத்திருந்ததாக ராஜரத்தினம் மற்றும் ராம்பிரபுவை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக சவுக்கு சங்கர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கு சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்குமாறு சைபர் கிரைம் போலீசார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications