அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்.. வேட்புமனு தாக்கல் நிறைவு.. கோர்ட் உத்தரவுக்கு காத்திருக்கும் இபிஎஸ்!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்துள்ளது.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்துள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் போட்டியின்றி தேர்வாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சென்னை நீதிமன்றத்தின் உத்தரவால் எடப்பாடி பழனிசாமி மார்ச் 24ஆம் தேதி வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பை, அதிமுக துணைப் பொதுச்செயலாளரும், தேர்தல் ஆணையாளருமான நத்தம் விசுவநாதன், கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும், தேர்தல் ஆணையாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் நேற்று முன்தினம் வெளியிட்டனர்.
அதில், அதிமுக சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு-2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு "கட்சியின் பொதுச் செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்" என்ற விதிமுறைக்கு ஏற்ப கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இபிஎஸ் வேட்புமனு தாக்கல்
இந்த பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, மார்ச் 19ஆம் தேதி மதியம் 3 மணியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல் மார்ச் 26ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறு உள்ளது. அதேபோல் மார்ச் 27ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதனிடையே அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஓபிஎஸ் தரப்பு வழக்கு
இதனிடையே ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் தரப்பில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், இரட்டை தலைமையை ஒழித்து ஒற்றைத் தலைமை உருவாக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக்கோரிய உரிமையியல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பொது செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

நீதிமன்றத்தில் விசாரணை
இந்த அவசர முறையீட்டை ஏற்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, இந்த அவசர மனுவை நீதிபதி கே.குமரேஷ்பாபு விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதன்படி மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ள மனு நீதிபதி குமரேஷ்பாபு முன்பாக இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் தங்களின் வாதங்களை முன்வைத்தனர்.

தேர்தல் முடிவுக்கு நீதிமன்றம் தடை
இறுதியாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைமுறைகளை தொடரலாம். ஆனால் முடிவுகளை அறிவிக்க வேண்டாம். ஒரேயொரு வேட்புமனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட காரணத்தால் இத்தகைய பரிந்துரையை அளிக்கிறோம் . ஏப்ரல் 11ஆம் ஒத்தி வைக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான பழைய வழக்கு முன்கூட்டியே மார்ச் 22ஆம் தேதி விசாரிக்கப்பட்டு, மார்ச் 24ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

வேட்புமனு தாக்கல் நிறைவு
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான அவகாசம் நிறைவடைந்துள்ளது. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து வேறு யாரும் பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

காத்திருக்கும் இபிஎஸ்
இந்த இரு நாட்களில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 221பேர் விருப்ப மனு பெற்றுள்ளனர். அதேபோல் எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், அவரே போட்டியின்றி தேர்வாவார். இருப்பினும் போட்டியாளர் யாருமில்லை என்றாலும், நீதிமன்ற தடையால் எடப்பாடி பழனிசாமி மார்ச் 24ம் தேதி வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications