முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா...? விவசாயிகளை ஒன்றுதிரட்டும் டெல்டா அதிமுக
சென்னை: காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு டெல்டா மண்டல அதிமுக திட்டமிட்டுள்ளது.
டெல்டா பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நேற்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி தராது என்றும், காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் விவசாய சங்கத்தினரும் வரவேற்று அரசுக்கு நன்றி கூறியுள்ளனர். டெல்டா மாவட்டங்களில் சரிந்த அதிமுகவின் இமேஜை ஒரே அறிவிப்பில் உயரத்துக்கு கொண்டு சென்றுவிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இதனால் டெல்டா மாவட்ட அதிமுகவினர் இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் குதித்துள்ளனர். முதல்வர் நேற்று நண்பகல் அறிவித்த அடுத்த 4 மணி நேரத்தில் விவசாய சங்க பிரதிநிதிகளை தொடர்பு கொண்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள், முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வாருங்கள் என அழைப்பு விடுத்தனர். மேலும், விவசாய சங்க பிரதிநிதிகளை ஒன்றிணைத்து தஞ்சை அல்லது திருவாரூரில் விரைவில் பிரம்மாண்ட முறையில் நன்றி தெரிவிக்கும் விழா நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதனால் டெல்டா மண்டல அதிமுகவில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.
காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டிய விவகாரத்தில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தஞ்சையில் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அதே வரலாறு மீண்டும் திரும்பப்போகிறது எனக் கூறும் வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தஞ்சையில் பாராட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை அதிமுகவின் டெல்டா மண்டல முக்கிய பிரமுகர் ஒருவர் மேற்கொள்ள தொடங்கியுள்ளாராம்.












Click it and Unblock the Notifications