ஆரம்பமே ஆக்ஷன் தான்.. போலீசாருக்கு பறந்த உத்தரவு.. இனி எல்லா நாளும்- டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி!
சென்னை: தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்ற பின்னர் அதிரடி காட்டி வருகிறார். போலீஸ் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவுகள் பறந்துள்ள நிலையில், வார நாட்களில் தினமும் பொதுமக்கள் மற்றும் போலீசார் டிஜிபி அலுவலகத்தில் தன்னிடம் நேரில் புகார் மனு அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக பணிபுரிந்து வந்த சைலேந்திரபாபு கடந்த ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்ற நிலையில் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் பொறுப்பேற்றுக் கொண்டார். டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்டதும், ரவுடிகளுக்கு எதிரான, கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்றும், போலீசார், பொதுமக்களின் நலன்காக்க பல புதிய திட்டங்கள் உள்ளன என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல்துறை ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிகளுக்கும், எஸ்பிகளுக்கும் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். இன்ஸ்பெக்டர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு பணிகளை கவனிக்க வேண்டும். ரவுடி பட்டியலில் உள்ளவர்கள் ஜாமினில் வெளியே வந்தால் அவர்களை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், உதவி கமிஷனராக உள்ளவர்கள் பகல் நேர பணியோடு நள்ளிரவு 2 மணி வரை பணிபுரிய வேண்டும். பகல் மற்றும் இரவு நேரங்களில் கண்டிப்பாக வாகன ரோந்து நடத்த வேண்டும். அப்போது குற்றப் பட்டியலில் உள்ளவர்களை கைது செய்ய வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், லாட்ஜ், ஹோட்டல்களில் முறையாக சோதனை நடத்தி, சரியான முகவரியை கொடுத்து தங்கியுள்ளார்களா ? என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்குள் மற்றும் இரவு 10 மணிக்கு மேல் திறந்து இருக்கிறதா என்பதைக் கண்காணித்து, விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அதோடு, பொதுமக்கள் மற்றும் காவலர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் அவர்களின் மனுக்களை, திங்கள் முதல் வெள்ளி வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர, தினமும் காலை 11.30 மணிக்கு டிஜிபி அலுவலகத்தில், பார்வையாளர்கள் அறையில் மனுக்களை நேரில் பெறுகிறேன் என டிஜிபி சங்கர் ஜிவால் அறிவித்துள்ளார். அதன்படி இன்று முதல் மனுக்களை டிஜிபியிடம் அளித்துப் பயன்பெறலாம்.












Click it and Unblock the Notifications