2017ன் மாஸ்டர்மைண்ட்.. பாதை மாறிய கார்.. ரகசியமாக "அவரையே" வீட்டில் சந்தித்த ஓபிஎஸ்! "கேம் ஓவர்"?
சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில் முக்கியமான அரசியல் புள்ளி ஒருவரை ஓ பன்னீர்செல்வம் நேற்று சந்தித்ததாக கூறப்படுகிறது.
அதிமுகவில் நொடிக்கு ஒரு திருப்பம்.. நிமிடத்திற்கு ஒரு வழக்கு என்று பரபரப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுக்க இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுக்குழு தொடர்பாக ஏற்கனவே ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதோடு தலைமை கழக கூட்டத்திற்கு எதிராக இவர் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டு இருக்கிறார்.
அதிமுக பொதுக்குழு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு! ஈபிஎஸ் அணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!
பொதுக்குழு
இது போக ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் சட்ட விதிகள் மீறப்படவில்லை என்று அவமதிப்பு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார். இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக, எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளது. ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதில் மனு அளிக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி வருகிறார் .
பெரும்பான்மை
பெரும்பான்மை உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் பதில் மனுவில் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் இதனால் மிக நீண்ட சட்ட போராட்டங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே ஓ பன்னீர்செல்வம் மிக சிறப்பான முடிவுகளை எடுத்து வருகிறார். சட்ட ரீதியாக மிகவும் திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். கட்சிக்குள் அவருக்கு பெரிதாக ஆதரவு இல்லை.
சப்போர்ட்
அவருக்கு பெரிதாக நிர்வாகிகள் சப்போர்ட் இல்லை. ஆனாலும் கூட அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஓ பன்னீர்செல்வம் சட்ட ரீதியாக பல்வேறு வழக்குகளை தொடுப்பது, முடிவுகளை எடுப்பது என்று கவனம் ஈர்த்து வருகிறார். சட்ட ரீதியாக இதுவரை ஓபிஎஸ் கையே ஓங்கி உள்ளது. இந்த நிலையில்தான் நேற்று முக்கியமான நிர்வாகி ஒருவரை சென்னையில் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து பேசியதாக அவருக்கு நெருக்கமான ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள்.
மோதல் உச்சம்
2017ல் அதிமுகவில் மோதல் உச்சத்தில் இருந்த போது அந்த நபர்தான் இரண்டு தரப்பிற்கும் இடையில் மத்தியசம் பேசினார். அவரிடம்தான் இரண்டு தரப்பும் பிரச்சனை வரும் போதெல்லாம் சென்றது. ஆனால் அதன்பின் கடந்த ஒன்றரை வருடமாக அவர் அதிமுக விவகாரங்களில் தலையிட்டுக்கொள்ளவில்லை. அவரிடமும் அதிமுக நிர்வாகிகள் பெரிதாக தொடர்பில் இல்லை. அவரும் டெல்லி பக்கம் சென்று அங்கு பிசியாக இருந்தார்.
சென்னை வீடு
இந்த நிலையில் சென்னை வந்த அவரின் வீட்டிற்கு ஓ பன்னீர்செல்வம் காரில் சென்றதாக கூறப்படுகிறது. நேற்று இவர்கள் 1 மணி நேரம் ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சட்ட போராட்டங்கள் நீண்ட காலம் ஆகும். எப்படியும் சட்ட ரீதியாக எடப்பாடி ஜெயிக்க முடியாது. அதனால் சமாதானம் பேச சொல்லுங்கள். இரட்டை தலைமை தொடர ஒப்புக்கொள்ள சொல்லுங்கள் என்று ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. மொத்தமாக இரு தரப்பு பிரச்சனையை முடிக்கும் வகையில் சமாதானம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த மீட்டிங்கில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.