தீ தளபதி.. விஜய் ரசிகர்களுக்கு தீயாகப் பறந்த உத்தரவு.. அம்பேத்கர் மூலம் அரசியலுக்கு ஆயத்தம்? ஓஹோ?!
சென்னை : அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 14-ஆம் தேதியன்று, விஜய் மக்கள் இயக்கம் சார்பில், அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னோட்டமாகவே இந்த உத்தரவு பறந்திருப்பதாக பரபரக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் விஜய், அரசியலிலும் தீவிரமாக இறங்கிச் செயல்படும் எண்ணத்தில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கம் சார்பில், பல்வேறு மக்கள் நலப் பணிகளை அவ்வப்போது செய்து வருகிறார். அரசியலில் இறங்குவதாக விஜய் அறிவிக்காவிட்டாலும், கடந்த ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றனர்.

அரசியலில் ஈடுபடும் தனது முயற்சிக்கான விதையாக, டாக்டர் அம்பேத்கரை கையில் எடுத்துள்ளார் நடிகர் விஜய். வரும் ஏப்ரல் 14ஆம் தேதி சட்டமேதை அம்பேத்கரின் 132வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அம்பேத்கரின் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் இதுதொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளதோடு, தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடுவது குறித்தும், காவல்துறையினரிடம் முன்கூட்டியே அனுமதி பெறுவது குறித்தும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, விஜய் மக்கள் இயக்கத்திலும் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மே மாதம் வரை ஒவ்வொரு மாவட்டமாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் சூழலில் விஜய்யும் இந்த ரேஸில் குதித்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஏற்கனவே தனது படங்கள் மூலம் அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தி வரும் விஜய், முதன்முறையாக தனது மக்கள் இயக்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலித் சமூக மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் இந்த செயல்பாட்டை விஜய் முன்னெடுப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் பரபரப்பாக கிளம்பியுள்ளன.












Click it and Unblock the Notifications