யாராலும் அசைக்க முடியாது- திமுக மேலிடம் கையில் எடுத்த எடப்பாடி பார்முலா.. உ.பி.க்கள் 'மகிழ்ச்சி'
சென்னை: திமுக ஆட்சியில் அமர்ந்தாலும் கடைகோடி தொண்டனுக்கு என்னதான் கிடைத்தது? என்கிற குமுறல்களுக்கு திமுக மேலிடம் ஏதோ ஒருவகையில் தீர்வு கண்டிருப்பதால் அக்கட்சியின் தொண்டர்கள் பெருமகிழ்வுடன் வலம் வருகின்றனராம்.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவு, ஓபிஎஸ் தர்மயுத்தம்... இத்தனைக்குப் பின் சசிகலாவின் பிரதிநிதியாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அதே எடப்பாடி பழனிசாமிதான் சசிகலாவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என இன்றைக்கும் கேள்வி கேட்கிறார். இரு மாதம் கூட தாக்குப் பிடிக்கமாட்டார்; 6 மாதம் ஆட்சி தாங்காது என ஏகடியம் பேசினார்.
அந்த எடப்பாடி பழனிசாமி, இன்று அதிமுக என்கிற ஒட்டுமொத்த கட்சியையும் தன் வயப்படுத்தி நிற்கிறார். அதிமுகவின் 2000க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பின்னால் நிற்கின்றனர். அதிமுகவின் பொதுச்செயலாளராக மகுடம் சூட்டப் போகிறார் இபிஎஸ் என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி.

எடப்பாடியின் வியூகம்
சசிகலாவிடம் பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமி எப்படி இப்படி ஒரு சாதனையை செய்ய முடிந்தது? அவ்வளவு பெரிய பேச்சாற்றல் கொண்ட, செயலாற்றல் கொண்ட வல்லமைமிக்கவரா? அப்படியும் இல்லையே.. ஆனால் சாதிக்க முடிந்தது எப்படி எனில் கவனிப்பு என்கிற வைட்டமின் மாத்திரைதான். வாரி இறைக்கப்பட்ட வைட்டமின்களால் திணறிப் போன எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சிகள் அத்தனையும் அன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு சேதாரம் இல்லாமல் கரை சேர உதவியது. இன்று அதிமுகவின் பொதுச்செயலாளர் நாற்காலி நமக்குதான் என அவரை நம்ப வைத்து சட்டப் போராட்டங்களை எதிர்கொள்ள வைத்திருக்கிறது.

திமுக ஆட்சி
இதுதான் எடப்பாடி கையாண்ட வியூகம். 10 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தது. சிங்கிள் டீ குடித்துவிட்டு, போஸ்டர் ஒட்டிவிட்டு, ஊர் ஊராய் சைக்கிளில் போய் தொண்டை கிழிய கலைஞர் வாழ்க! என பேசிய உடன்பிறப்புகள் அரிதாகிப் போன காலம். அரசியல் என்பது ஆதாயத்துக்கானது; அரசியல் பதவிகள் என்பது கோட்டைகளுக்கானது என்கிற இன்றைய அரசியல் பாடங்களுக்கு உடன்பிறப்புகள் மட்டுமா விதிவிலக்கு? அவர்களிடம் ஆட்சி வந்துவிட்டது.. நமக்கு என்ன கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருப்பது இயல்பு.

தொண்டர்கள் குமுறல்
திமுகவின் ஓராண்டு கால ஆட்சியில் கீழ் நிலையில் இருந்து மேல்நிலை வரை ஒவ்வொரு பதவிக்கும் அடேங்கப்பா! எத்தனை எத்தனை போட்டி- எத்தனை எத்தனை குழிபறிப்புகள்.. இதில் ஜெயித்த குதிரைகள் சொகுசாக பவனிவருகிறார்கள்.. தோற்றவர்கள் சமூக வலைதளங்களில் குமுறி குமுறி கொட்டி தீர்க்கிறார்கள்.. சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவரைப் போல.

களத்தில் எடப்பாடி பார்முலா
இப்போதுதான் அந்த குமுறல்களுக்கு விடிவுகாலம் போல.. திமுகவின் சரித்திரத்திலேயே இல்லாத வகையில் எடப்பாடி பார்முலாவின் அடிப்படையில் அறிவாலய மேலிடமும் கவனிப்பு வியூகத்தை கையில் எடுத்துவிட்டதாம். இதனை எதிர்பார்க்காத திமுக உடன்பிறப்புகள், ஏச்சுகளையும் பேச்சுகளையும் மூட்டை கட்டிக் கொண்டு வழக்கம் போல இருவண்ணக் கொடி ஏந்தி வாழ்க கோஷத்துக்கு மகிழ்ச்சியுடன் தயாராகி கொண்டிருக்கின்றனராம்.












Click it and Unblock the Notifications