பேராசிரியர் அன்பழகன் படத்திறப்பு... வரும் 14-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நிகழ்ச்சி
சென்னை: மறைந்த திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் படத்திறப்பு நிகழ்ச்சி வரும் 14-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவார் என்றும், பேராசிரியர் அன்பழகன் படத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் எனவும் திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், அன்றைய தினம் (மார்ச் 14-ம் தேதி) பேராசிரியர் அன்பழகனுக்கு நினைவேந்தல் கூட்டமும் நடைபெறுகிறது. அதில் திமுக தோழமைக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று அன்பழகன் பற்றி தங்களின் நினைவலைகளை பகிர்ந்துகொள்ள உள்ளார்கள்.

பேராசிரியர் அன்பழகன் குடும்பத்தினர் படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அவர்கள் கலந்துகொள்ளும் பட்சத்தில் அவர்களை கவுரவிக்கும் பொருட்டு திமுக தலைமைக்கழகம் சார்பில் சிறப்பு செய்யப்படும் எனத் தெரிகிறது. அன்பழகன் உயிருடன் இருந்தவரை தன்னை மீறி தனது குடும்பத்தினர் யாரையும் கட்சிக்குள் செயல்பட அனுமதிக்கவில்லை. அன்பழகனின் மகன் யார் மகள் யார் என்பதே திமுக முன்னணி நிர்வாகிகள் பலருக்கும் தெரியாது.
இதனிடையே அன்பழகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் எழுதிய இரங்கற்பாவுக்கு நன்றி கூறி அவரது மகன் அன்புச்செல்வன் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதில், பேராசிரியருக்காக நீங்கள்(ஸ்டாலின்) எழுதிய இரங்கற்பா மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது என்றும், தங்கள் துயரத்தை அதில் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் எனவும் நெகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் அன்பழகனின் மகன் அன்புச்செல்வன்.
பேராசிரியர் அன்பழகனுக்கு அனைத்து மாவட்டங்களிலும் இரங்கல் கூட்டம் நடத்தவும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இந்த வாரம் படத்திறப்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் மாவட்டச் செயலாளர்கள் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் பேராசிரியருக்கு இரங்கல் கூட்டம் நடத்த முடிவெடுத்துள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications