பவர்ஃபுல்.. திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய பதவியிட தேர்தலுக்கு இன்று வேட்புமனு தாக்கல்
சென்னை: திமுக-வில் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட துணைச் செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தலுக்கு, இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. 72 கழக மாவட்டங்களுக்கு நடைபெறவுள்ள இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல், வரும் 25-ம் தேதி நிறைவு பெறுகிறது
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், உட்கட்சித் தேர்தலை நடத்தி, அதனை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, திமுகவில் கிளை, பேரூர், கழகம், மாநகர, வட்டக் கழகம், ஒன்றிய, நகர, மாநகர, பகுதிக் கழகம், மாநகரக் கழகம், மாவட்டம் என பல்வேறு கட்டங்களாக 15-வது உட்கட்சி தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், மாவட்டச் செயலாளர், மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட துணைச் செயலாளர்கள், பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், தலைமைக்கழக உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வரும் 25-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இந்தப் பொறுப்புகளுக்குப் போட்டியிடுவோர்,அதற்கென உள்ள படிவத்தை முறைப்படி பூர்த்தி செய்து, ரூ.25,000 கட்டணமாக தலைமைக் கழகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த வேட்புமனு தாக்கல், மாவட்டம் வாரியாக நடைபெறள்ளது. அதன்படி, இன்று, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், இந்தப் பொறுப்புகளுக்கு போட்டியிட விரும்பினால், தலைமைக் கழகத்தில் கட்டணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
நாளை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வேட்பு மனுக்கான கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வரும் 24-ம் தேதி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை, தஞ்சை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்தலாம்.
வரும் 25-ம் தேதி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், கட்டணம் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், வேட்பு மனுக்களை முன்மொழிபவரும், வழிமொழிபவரும் அந்தந்த மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூர், ஒன்றிய, நகர, பகுதி மாநகரச் செயலாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட பிரதிநிதிகளாகத்தான் இருக்க வேண்டும். வேட்புமனு விண்ணப்ப படிவம் ஒன்றுக்கு ரூ.1000 கட்டணம் செலுத்தி, தலைமைக்கழகத்தில் பெற்றுள்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.