என் சக்தியை தாண்டி உழைக்கிறேன்.. வெற்றி சாதாரணமாக கிடைக்காது.. நிர்வாகிகளிடம் கோபப்பட ஸ்டாலின்!
2 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் திமுக பொதுக்குழுவில் கோபமாக பேசி இருக்கிறார்.
சென்னை: 2 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் திமுக பொதுக்குழுவில் கோபமாக பேசி இருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இதில் ஆலோசித்தனர். உள்ளாட்சி தேர்தல் குறித்து இதில் முக்கிய விவாதங்கள் செய்யப்பட்டது.
திமுகவின் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், சில எம்பிக்கள் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதேபோல் நாளையே திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது. தமிழகம் முழுக்க இருக்கும் திமுக மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ஸ்டாலின் பேசினார்
நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதி இரண்டுமே திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் கோட்டை. ஆனால் அதில் திமுக கூட்டணி தோல்வியை தழுவியதை ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் இதை பற்றி கோபமாக பேசி இருக்கிறார்.
மிக கோபம்
ஸ்டாலின் தனது பேச்சில், திமுக தலைவராக இருந்த கருணாநிதி போல நான் எழுதுவது கிடையாது. அவரை போல மிக சிறப்பாக என்னால் பேச முடியாது. ஆனால் எதையும் நான் கற்றுக்கொள்வேன். அனைத்தையும் என்னால் சமாளிக்க முடியும். நான் கட்சிக்காக தீவிரமாக உழைத்து வருவது உங்களுக்கு தெரியும்.
என்னுடைய சக்தி
என்னுடைய சக்திக்கு மீறி நான் வேலை பார்த்து வருகிறேன். வெற்றி சாதாரணமாக கிடைக்காது; கிடைக்கவும் விட மாட்டார்கள். ஒற்றுமையின்றி உழைத்தால் வெற்றி கிடைக்காது. மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என்று ஸ்டாலின் தனது பேச்சின் போது குறிப்பிட்டார்.
இரண்டு செயலாளர்கள்
நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தோல்வி அடைந்ததற்கு செயலாளர்கள் இடையே ஒற்றுமை இல்லாததுதான் காரணம் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு புகார் சென்று இருக்கிறது. பல முக்கிய உறுப்பினர்கள் தேர்தல் நேரத்தில் வேலை பார்க்கவில்லை. லோக்சபா தேர்தலின் வெற்றி மிதப்பில் இருந்தனர் என்று புகார் சென்றுள்ளது.
என்னுடைய சக்தி
இதை சுட்டிக்காட்டும் விதமாகத்தான், நான் என் சக்தியை தாண்டி உழைக்கிறேன், நீங்களும் அதைப்போல உழைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறி இருக்கிறார். அதேபோல் சில மாவட்ட செயலாளர்களை ஸ்டாலின் தனியாக அழைத்தும் இந்த கூட்டத்தில் கண்டித்து இருக்கிறார். உள்ளாட்சி தேர்தலில் இப்படி விட கூடாது என்று கூறியுள்ளார்.
தீவிரமாக காட்டுங்கள்
உள்ளாட்சி தேர்தலில் வென்றால்தான் 2021 சட்டசபை தேர்தலில் வெல்ல முடியும். அதனால் எப்படியாவது இதில் தீவிரமாக செயல்பட்டு வெற்றிபெற வேண்டும். உங்களிடையே பூசல் இருந்தால் என்னிடம் நேராக சொல்லுங்கள் என்றும் ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களிடம் கூறி இருக்கிறார்.
யாரை நீக்கும்
இதனால்தான் கட்சியில் யாரை வேண்டுமானாலும் நீக்கும் அதிகாரம் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு உள்ளது என்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் கட்சியில் சில முக்கிய களையெடுப்பு பணிகளை செய்வார். உட்கட்சி பூசல்கள் சரி செய்யப்படும் என்று கூறுகிறார்கள்.