"ஓசி பஸ்ஸில் பயணிப்பவர்கள்" திமுக அமைச்சர்கள் நடந்துகொள்ளும் தோரணை சரியில்லை.. சொல்வது ஜெயக்குமார்!
சென்னை: திமுக அமைச்சர்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போன்றும், பண்ணையார்கள் போலவும் நினைத்துக்கொண்டு நடப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற கலவரத்தால் அதிமுக தலைமை அலுவலகம் சேதமடைந்தது. இதனால் சேதமான அலுவலகத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஓரிரு நாட்களில் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில் சீரமைப்புப் பணிகளை பார்வையிட கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகம் வந்தார்.

ஜெயக்குமார் பேட்டி
பின்னர் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை பார்வையிட்ட பின்னர், மாற்றுக் கட்சி நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். இதன்மூலம் அதிமுகவில் ஏற்பட்டுள்ள எழுச்சியை அனைவரும் பார்க்க முடியும். இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக தெரிவித்தார்.

ஓபிஎஸ்-க்கு சவால்
தொடர்ந்து, அதிமுக சார்பாக மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை மக்கள் மத்தியில் எடுத்து சொல்லும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. அதேபோல் அண்ணா பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. ஆனால் ஓபிஎஸ் பின் தொண்டர் படை இருக்கிறது என்று கூறுகிறார். அவரால் 75 மாவட்டங்களில் கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த திராணி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.

திமுக அமைச்சர்கள்
தொடர்ந்து இலவச பேருந்து பற்றி பொன்முடி பேசிய கருத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, இது பெண்களையே அவமானம் செய்யும் விஷயமாக தான் பார்க்க முடிகிறது. அவர்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல், பண்ணையார்கள் போல் நினைத்துக் கொள்கிறார்கள். பதவி வந்தபின் தோரணையாக செயல்படுகின்றனர். கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெலுங்கு படங்களில் வரும் அமைச்சர் போல் அமர்ந்துள்ளார். அதேபோல் அமைச்சர் பொன்முடி பொதுக்கூட்டத்திலேயே பெண்ணை அவமானமாக பேசியுள்ளார். அதேபோல் இப்போது இவர்களின் சொந்த பணத்தில் காசு கொடுப்பது போல் பேசுகிறார் என்று தெரிவித்தார்.

திமுக மீது பயமில்லை
தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, எப்போதும் தமிழகத்தில் திமுக ஆட்சி வருகிறதோ, அப்போதெல்லாம் வன்முறை கலாச்சாரம் அதிகரிக்கிறது. சட்டத்தை கையில் எடுப்பவர்களுக்கு திமுக அரசு மீது பயமில்லை. அமைதியை ஏற்படுத்துவதற்கு திமுக நடவடிக்கை எடுக்கவில்லை. பெட்ரோல் குண்டு கலாச்சாரம், கத்தி கலாச்சாரம், கஞ்சா கலாச்சாரம், சூதாட்ட கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

ஆ.ராசா பற்றி கருத்து
அதேபோல் ஆ,ராசா விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்தியா இப்போது மனு தர்மம்படி நடக்கவில்லை. எத்தனையோ பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்துவதை விட்டு, மத விவகாரங்களில் மூக்கை நுழைக்கக் கூடாது. அவரவர் நம்பிக்கையில் அவர் செயல்படுகிறார்கள். நேர்மையான முதலமைச்சர் என்றால் மதத்தை இழிவுபடுத்தி பேசிய ஆ.ராசாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications