அவனியாபுரம்: இணைந்த திமுக அதிமுக.. ராஜன் செல்லப்பா அடித்த கமெண்ட்! கைதட்டி சிரித்த அமைச்சர் மூர்த்தி
சென்னை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின்போது, திமுக அமைச்சர் மூர்த்தியும், அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தது இரு கட்சியினரையும், பொதுமக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சிறந்த காளைக்கு டிராக்டர் வாகனமும் மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு நிசான் காரும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போட்டியில் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், மிக்சி, மின்விசிறி, கிரைண்டர், குக்கர், கட்டில், மிதிவண்டி உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்படுகின்றன. பங்குபெறும் அனைத்து காளைகளுக்கும் வேட்டி துண்டு பரிசாக வழங்கப்படுகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் இரண்டாயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை மாநகர காவல்துறை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதால், அவனியாபுரம் பகுதியில் இயங்கி வரும் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள மேடையில் அமைச்சர் பி.மூர்த்தி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மதுரை மேயரும், இந்நாள் சட்டமன்ற உறுப்பினருமான ராஜன் செல்லப்பா ஆகியோர் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.

அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, அடித்த கமெண்ட்டை கேட்டு கைதட்டிச் சிரித்தார் அமைச்சர் மூர்த்தி. மதுரையில் எதிரெதிர் துருவங்களாகச் செயல்படும் கட்சிப் பிரமுகர்கள் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தது, ஜல்லிக்கட்டு பார்வையாளர்களையும், இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், "அவனியாபுரத்தில் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மக்கள் அதிகளவில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டை அதிமுகதான் போராடி பெற்றது. போராடிப் பெற்ற இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு சிறப்பாக நடைபெற வேண்டும். செல்வாக்கையும், ஆதிக்கத்தையும் காட்டக்கூடாது" எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications