அரசு நிலத்தை உடனே காலி செய்யுங்க.. 'இல்லாவிட்டால்'.. திமுக எம்பி கலாநிதி வீராசாமிக்கு ஹைகோர்ட் கெடு
சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை ஒரு மாதத்திற்குள் திமுக எம்பி கலாநிதி வீராசாமி காலி செய்ய வேண்டும், இல்லையெனில் அப்புறப்படுத்தி தமிழக அரசு, அந்த நிலத்தை மீட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகனும், திமுக எம்பியுமான கலாநிதி வீராசாமி, கோயம்பேட்டில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த இடம் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலம் என்று குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கில் தான், கலாநிதி வீராசாமிக்கு இடத்தை காலி செய்ய அக்டோபர் 10-ம் தேதி வரை உயர் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.

சென்னை கோயம்பேட்டில் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமிக்கு சொந்தமான வீகேர் மருத்துவமனை அமைந்துள்ள நிலத்தில் 62.93 சதுர மீட்டர் பரப்பு நிலத்தை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும் கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, அதனை காலி செய்யும்படி 2011ம் ஆண்டு கலாநிதி வீராசாமிக்கு தமிழக அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்தும், நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் டாக்டர் கலாநிதி வீராசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
1995 ஆம் ஆண்டு கலாநிதி வீராசாமியின் குடும்பத்தினர் வாங்கியதாகவும் அந்த நிலம் வருவாய்ப் பதிவேட்டில் கிராம நத்தம் (பொது கிராம நிலம்) என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதன் மீது அரசு உரிமை கோர முடியாது என்றும் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 'கிராம நத்தம் நிலம் என்பது வீடில்லா ஏழை மக்களுக்கு வழங்கவே ஒதுக்கப்பட்டது. எனவே அந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது. மனுதாரர் எம்.பி.யாக உள்ளதாலும், அவரது தந்தை தமிழக முன்னாள் அமைச்சராக இருந்துள்ளார் என்பதாலும், அவர் நிலமற்ற ஏழை அல்ல..
தமிழகத்தில் சமூக நீதி பாதுகாவலர்கள் எனக் கூறும் அரசியல் கட்சிகள், மக்கள் விருப்பத்துக்கு கவுரவம் வழங்க வேண்டும். எனவே கலாநிதி வீராசாமி எம்பி ஒரு மாதத்தில் நிலத்தை காலி செய்து ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை அப்புறப்படுத்தி, நிலத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று நீதிபதி கூறினார். அத்துடன் அந்த வழக்கை முடித்து வைத்தும் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications