நலம் நலமறிய ஆவல்... பொதுமக்களுடன் கலந்துரையாடும் ஸ்டாலின்... ''ஒன்றிணைவோம் வா'' செயல்திட்டம்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ''ஒன்றிணைவோம் வா'' என்ற செயல்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பொதுமக்களில் 50 பேருடன் காணொலி காட்சி மூலம் இன்று பேசினார்.
கட்சிக்கு அப்பாற்பட்டு பொதுமக்களுடன் நாள்தோறும் காணொலி வாயிலாக பேசி வரும் ஸ்டாலின், லாக்டவுனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி அவர்களிடம் கேட்டறிந்து வருகிறார்.
மேலும், உடல்நலன் பற்றி விசாரிப்பதோடு ஊக்கமும், நம்பிக்கையும் ஸ்டாலின் அளிப்பதால் ''ஒன்றிணைவோம் வா'' செயல்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளது.

புதிய செயல்திட்டம்
தமிழகம் தழுவிய அளவில் மக்கள் சந்திப்பு பயணத்திற்கு மு.க.ஸ்டாலின் ஆயத்தமாகி கொண்டிருந்த நிலையில் கொரோனா விவகாரம் இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்தது. இதனால் தனது பயண திட்டத்தை ரத்து செய்த ஸ்டாலின், மக்களுடன் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ள மாற்றி வழிகளை சிந்திக்கத் தொடங்கினார். அந்த தருணம் பார்த்து ''ஒன்றிணைவோம் வா'' என்ற காணொலி கான்செப்டை பிரசாந்த் கிஷோர் டீம் முன்வைக்க மளமளவென அது தொடர்பான பணிகளில் இறங்கினார் ஸ்டாலின்.

நாள்தோறும் ஆலோசனை
மு.க.ஸ்டாலின் வீட்டில் இருந்தாலும் நாளொன்றுக்கு குறைந்தது 50 பொதுமக்களுடனாவது காணொலிக் காட்சி மூலம் நேரடியாக பேசி அவர்களின் எண்ண பிரதிபலிப்புகளை அறிந்துகொள்கிறார். காணொலிக் காட்சி சந்திப்பு என்ற கான்செப்ட் முதல் சரியாக இருக்குமா என தயங்கிய திமுக மூத்த நிர்வாகிகள் பலரும் இப்போது தங்களது அலைபேசிகளில் ஜூம் உள்ளிட்ட வீடியோ கான்பிரன்ஸ் செயலிகளை பதிவிறக்கம் செய்து அதனை தாங்களே இயக்கும் அளவிற்கு வந்துவிட்டனர்.

உதவிகள் கிடைக்கிறதா
இதனிடையே இன்று 50 பேருடன் காணொலி மூலம் பேசிய ஸ்டாலின், உங்களுக்கு சரியாக உதவிகள் கிடைக்கிறதா, உடல் நலம் எப்படி இருக்கிறது என கனிவோடு விசாரித்துள்ளார். மேலும், தேவையின்றி வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்றும் உங்களுக்கு எப்போதும் திமுக துணை நிற்கும் எனவும் ஆறுதல் வார்த்தை கூறியுள்ளார். ஸ்டாலினின் இந்த ஆறுதலான வார்த்தைகளை கேட்டு பலர் கண்ணீர்விட்டு அழுது நெகிழ்ந்துள்ளனர்.

நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்
மேலும், உதவி எண் மூலம் உதவி கிடைத்ததா என்றும் ஊரடங்கால் உங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது எனவும் ஸ்டாலின் தானே கைப்பட குறிப்பெடுத்துக்கொள்கிறார். மேலும், கொரோனாவின் தாக்கம் பற்றி கேட்டறிவதோடு, அரசுக்கு இணையாக நிவாரண உதவிகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு அறுவுறுத்தவும் செய்கிறார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications