சத்யராஜ் மகள் திவ்யா எந்த அரசியல் கட்சியில் எப்போது சேர போகிறார் தெரியுமா? அவரே அளித்த விளக்கம்
சென்னை: தேர்தலுக்கு பிறகு அரசியல் கட்சியில் இணைந்து பணியாற்றவுள்ளதாக ஊட்டச்சத்து நிபுணரும் நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
திவ்யா, சில காலமாக அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார். ஆனால் பதவிக்காகவும் பணத்துக்காகவும் அரசியலுக்கு வர கூடாது என்பதிலும் அவர் தெளிவாக இருக்கிறார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுமாறு திவ்யாவுக்கு, பாஜக அழைப்பு விடுத்தது. இதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில் மீண்டும் தனது அரசியல் பிரவேசம் குறித்து தெளிவுப்படுத்த விரும்பி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சத்யராஜ் மகள் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு ஒரு கட்சியிலிருந்து அழைப்பு வந்தது உண்மைதான். ஆனால் எந்த ஒரு மதத்தை போற்றும் கட்சியுடனும் இணைவதில் விருப்பம் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம். நான் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதும் இல்லை. எந்த கட்சியுடன் இணைய போகிறேன் என்பதை தேர்தல் முடிந்தவுடன் அறிவிப்பேன் என தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: எனக்கு அரசியலில் ஆர்வம் உண்டு என சில பத்திரிகை நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். அதன் பிறகு எல்லாரும் என்னிடம் கேட்கும் கேள்வி, நீங்கள் மேயராகத்தான் அரசியலுக்கு வருகிறீர்களா, ராஜ்யசபா எம்பி பதவியில் ஆர்வம் இருக்கா?
சத்யராஜ் சார் உங்களுக்கு பிரச்சாரம் செய்வாரா... இப்படி பல கேள்விகள் என்னிடம் கேட்கிறார்கள். நான் பதவிக்காகவோ இல்லை தேர்தல் வெல்ல வேண்டும் என்பதற்காகவோ அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கவில்லை. மக்களுக்கு வேலை செய்வதற்காகத்தான் அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கிறேன்.
நான் களபணிகள் செய்ய ஆரம்பித்து சில ஆண்டுகள் ஆகின்றன. மகிழ்மதி இயக்கம் என்ற ஒரு அமைப்பை 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தேன். அந்த அமைப்பின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கி வருகிறோம்.
சத்யராஜின் மகளாகவும் ஒரு தமிழ் மகளாகவும் தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்பேன். என் மாநிலத்தில் உள்ள மக்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க சுயநலம் இல்லாமல் பணியாற்றுவேன். இவ்வாறு திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
திவ்யாவின் இந்த முடிவுக்கு சத்யராஜும் ஆதரவுதான். இது குறித்து அவர் ஏற்கெனவே ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: ஆமாம் என் மகள் திவ்யா விரைவில் அரசியலுக்கு வருவார். அவர் ஒரு கடின உழைப்பாளி, அவர் ஒரு சுயம்பு. எனவே நான் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருப்பேன். சமூக நீதி மற்றும் அரசியல் மீதான ஆர்வம் திவ்யாவுக்கு கல்லூரி காலத்திலேயே தொடங்கிவிட்டது என்றார்.
யார் இந்த திவ்யா: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. இவர் பிரபல ஊட்டச்சத்து நிபுணர். மகிழ்மதி என்ற இயக்கத்தை நடத்தி அதன் மூலம் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறார். மேலும் தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை அளித்து வருகிறார்.
உலகின் மிகப் பெரிய மதிய உணவு திட்டங்களில் ஒன்றான அட்சய பாத்திரத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் நெடுந்தீவில் உள்ள இலங்கைத் தமிழர்களின் உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த செரண்டிப் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications