பத்திரப்பதிவு.. பதிவுத்துறையில் நடந்த மேஜிக்.. 3 வருடத்தில் பல ஆயிரம் கோடிகளை குவித்த தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் பதிவுத்துறையால் ரூ.50 ஆயிரத்து 36 கோடி கிடைத்துள்ளதாகவும், வணிகவரி துறை மூலம் அரசுக்கு கடந்த 3ஆண்டுகளில் ரூ.3 லட்சத்து 69 ஆயிரத்து 323 கோடி வருமானம் வந்துள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று மாலை வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு துறை மீதான விவாதம் நடந்தது. இந்த விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் மூர்த்தி பேசுகையில், தமிழக அரசின் வரி வருவாயில் 73.5 சதவீதம் வணிகவரித் துறை மூலமாகவும், 14 சதவீதம் பதிவுத்துறை மூலமாகவும் பெறப்பட்டு, அரசுக்கு வரும் வருவாயில் 87.5 சதவீத வருவாயை ஈட்டித் தரும் பெருமைமிகு துறைகளாக, வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை உள்ளன.

தி மு க அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 3 ஆண்டுகளில் வணிகவரித் துறையானது திரளாக ரூ.3 லட்சத்து 69 ஆயிரத்து 323 கோடி வரி வருவாயை ஈட்டி இருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளில் திரளாக ரூ,50 ஆயிரத்து 36 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்திருக்கிறது. இவ்வாறாக, திராவிட முன்னேற்ற கழக அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 3 ஆண்டுகளில் வணிகவரித் துறையும், பதிவுத் துறையும் சேர்ந்து மொத்தமாக ரூ,4 லட்சத்து 19 ஆயிரத்து 359 கோடி வரி வருவாய் ஈட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளன.
இவ்விரு துறைகளால் வசூலிக்கப்படும் இந்த வருவாயின் பங்களிப்பானது, தமிழ்நாடு அரசு புதுமையான பல திட்டங்களை செயல்படுத்தி, மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும் ஆதாரமாக உள்ளது" இவ்வாறு அமைச்சர் மூர்த்தி பேசினார்.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை கொள்கை விளக்க குறிப்பு புத்தகத்தில் 2023-24-ம் நிதி ஆண்டில் ஜி எஸ் டி வரி வசூல் நிலவரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள விவரங்கள் பின்வருமாறு
தமிழகத்தில் மாநில நிதி ஆதாரங்களை திரட்டுவதில் முன்னோடியாக வணிக வரித்துறை விளங்குகிறது. அரசின் சொந்த வரி வருவாயில் 73.5 சதவீதம் வணிகவரித் துறை மூலம் பெறப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக வணிக வரித்துறை மூலம் வசூலிக்கப்படும் வரித்தொகை அதிகரித்து வருகிறது.
ஜி எஸ் டி இழப்பீடு இல்லாமல் கடந்த 2020-21-ம் நிதியாண்டில் ரூ,85 ஆயிரத்து 867.86 கோடியும், 2021-2022-ம் நிதியாண்டில் ரூ.97 ஆயிரத்து 856.83 கோடியும், 2022-2023-ம் நிதியாண்டில் ரூ,1 லட்சத்து 17 ஆயிரத்து 435.48 கோடியும், 2023-2024-ம் நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 5.92 கோடியும் வணிக வரித்துறை மூலம் வரியாக வசூல் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 2020 - 2021-ம் நிதியாண்டில் 26.95 லட்சம் எண்ணிக்கையில் ஆவண பதிவு நடைபெற்றது. இதன் முலம் அரசுக்கு ரூ,10 ஆயிரத்து 643 கோடி வருவாய் கிடைத்தது. 2023 - 2024-ம் நிதியாண்டில் 33.22 லட்சம் எண்ணிக்கையில் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரூ,18 ஆயிரத்து 825 கோடி வருவாய் கிடைத்துள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications