வேலை தேடும் இளைஞர்கள், பெற்றோர்கள் கட்டாயம் பாருங்க.. அலர்ட் வீடியோ வெளியிட்ட டிஜிபி சைலேந்திரபாபு!
சென்னை : அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறும் நபர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என டிஜிபி சைலேந்திரபாபு, வேலை தேடும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து பெரிய அளவில் மோசடிகள் அரங்கேறி வருகின்றன. சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் வரை ஒவ்வொரு நபரிடமும் மோசடி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறும் நபர்களை நம்ப வேண்டாம் என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.

அரசு வேலை
அரசுப் பணிகளுக்காக பல லட்சக்கணக்கான இளைஞர்கள், போட்டித் தேர்வுகளை எழுதிவிட்டு வேலைக்காக காத்திருக்கும் நிலையில், அரசு வேலை மீதான மோகத்தை ஆயுதமாக வைத்து இளைஞர்களுக்கு வலை வீசி மோசடியில் ஈடுபடும் கும்பலின் அட்டாகசங்களும் அதிகரித்து வருகிறது. அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி நம்பவைத்து லட்சக் கணக்கில் பணத்தைச் சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டும் கதைகள் தொடர்ந்து வருகின்றன. தொடர்ந்து அரசும், காவல்துறையும் எச்சரிக்கை விடுத்தும் இந்த மோசடிகளுக்கு பலர் இரையாகி வருவதுதான் வேதனை.

டிஜிபி எச்சரிக்கை
இந்நிலையில், இதுதொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த எச்சரிக்கை வீடியோவில், "பட்டதாரிகள், வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி இது. ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, சிலர் பணமும் வாங்கிவிட்டு வேலைக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரையும் கொடுக்கிறார்கள்.

அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்
நீங்கள் அதனைப் பெற்றுக்கொண்டு வட இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட ரயில்வே நிலையத்தில் வேலைக்கு சேர முயற்சிக்கும் போது, அது ஒரு போலி நியமன ஆணை என்று கூறி அங்கு உங்களை கைது செய்துவிடுவார்கள். சமீபத்தில் இப்படி நடந்தபோது நாங்கள் தலையிட்டு உண்மையான குற்றவாளியை ஒப்படைத்து அந்த நபரை மீட்டுக் கொண்டுவந்தோம். இது போல நிறைய பேர் ரயில்வே துறையில் பணம் கொடுத்து போலி நியமன ஆணைகளை வாங்கி ஏமாந்துள்ளனர்.

ஏமாற வேண்டாம்
ரயில்வே மட்டும் அல்ல, மத்திய, மாநில அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி வேலையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். எந்த அரசுப் பணிக்கும் அதற்கென ஒரு தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாகவே பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எந்த அரசுத் துறையிலும் இன்றைக்கு பணம் மூலம் ஆட்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறை இல்லை. ஆகவே, யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications