"5 மணி நேரம் லேட்!" ஸ்தம்பிக்கும் திருச்சி! பொதிகை, பாண்டியன் என பல தென்மாவட்ட ரயில்கள் தாமதம்
சென்னை: திருச்சியில் நடைபெறும் தண்டவாள சீரமைப்பு பணிகள் காரணமாக அந்த வழியாக இயக்கப்படும் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து இருக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றாகத் திருச்சி இருக்கிறது. தமிழ்நாட்டின் மத்திய பகுதியில் இருக்கும் திருச்சியில் இருந்து தினசரி பல ஆயிரம் பேர் சென்னைக்கு வருகிறார்கள்.

இதற்காக இரு மார்க்கத்திலும் பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முக்கிய ரயில் ரூட்களில் ஒன்றாக இருக்கும் இதில் பகல் நேரம் பயணிக்கும் ரயில்களும் சரி இரவு நேரம் பயணிக்கும் ரயில்களும் சரி இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே திருச்சியில் இப்போது தண்டவாள சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும், அங்கே புதிய புதிய ரயில்வே தடம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இதனால் இன்று காலை அங்கே ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பல ரயில்கள் சுமார் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுவதாகப் பயணிகள் புகார் தெரிவிக்கின்றர்.
இன்று காலை முதல் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. இரு மார்க்கத்திலும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதால் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். பராமரிப்பு பணிகள் காரணமாகத் தானியங்கி சிக்னல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் தாங்களாகவே சிக்னல்களை கொடுத்து வருகின்றனர்.
இதனால் திருச்சி சந்திப்பில் ரயில் நிலையத்திற்குள் ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாகத் தவல் வெளியாகியுள்ளது. பாண்டியன், பொதிகை, நெல்லை என முக்கிய ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாகப் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நாளை ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை இந்த பாதையில் பராமரிப்பு பணிகள் தொடரும் என்பதால் மேலும் பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே திருச்சியில் தண்டவாளப் பணிகளால் ஏற்பட்ட தாமத்தால் முன்பதிவு செய்தும் ரயிலில் பயணம் மேற்கொள்ள முடியாமல் போன பயணிகளுக்குப் பணம் திருப்பி தரப்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல முன்பதிவு செய்யாத பயணிகளும் ரயிலில் பயணிக்கவில்லை என்றால் அவர்களின் டிக்கெட் தொகையும் திரும்பத் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாத பயணிகள் ரயில்வே நிலையங்களில் அதிகாரிகளிடம் காலதாமத சான்று பெற்று பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பராமரிப்பு பணிகள் காரணமாகத் திருச்சியில் இருந்து தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், கரூர், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு இயக்கப்பட இருந்த முன்பதிவு இல்லாத பெட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருவனந்தபுரம்- திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் 11.35 மணிக்குப் பதிலாக 12.15 மணிக்குப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகத் திருச்சி இருக்கும் நிலையில், பராமரிப்பு பணிகளை விரைந்து முடித்து ரயில்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications