கூட்டணிக் கட்சிகளுடன் சுமூக டீலிங்! 6 பேர் கொண்ட டீமை களமிறக்கிய திமுக! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
சென்னை: கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுகவில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. மேற்கொண்டு இந்த கூட்டணியில் புதிதாக ஒன்றிரண்டு அரசியல் கட்சிகளும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் கூட்டணிப் பேச்சுவார்த்தையை மனக் கசப்பில்லாமல் பேசி முடிக்க திமுக தலைமை விரும்புகிறது. இதற்காக டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ.ராசா, ஆகிய 6 பேர் கொண்ட டீமை களமிறக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அமைச்சர் நேருவை பொறுத்தவரை கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் நெளிவு சுளிவு அறிந்து பதமாக பேசக்கூடியவர்.
அதேபோல் தான் டி.ஆர்.பாலு, ஆ.ராசா போன்றோரும் கூட்டணிக் கட்சி தலைவர்களிடம் சுமூகமாக பேசக்கூடியவர்கள். இதில் கவனிக்க வேண்டிய விவகாரம் என்னவென்றால் அமைச்சர் துரைமுருகன் இந்தக் குழுவில் இடம்பெறவில்லை என்பது தான். ஏனெனில் அவர் கொஞ்சம் ஓபனாக பேசக்கூடியவர் என்பதால் அவரால் கூட்டணி இடப் பங்கீட்டின் போது சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதால் அவரை கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் நியமிக்கவில்லை.
திமுக கூட்டணியில் பாமக இணையும் என ஆருடங்கள் கூறப்படும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. சேலம் திமுக இளைஞரணி மாநாடு முடிந்தவுடன் விசிக மாநாடு திருச்சியில் நடைபெறுகிறது. அதில் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரு ஒரே மேடையில் ஏறவுள்ளனர்.
இம்மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ அதிகாரப்பூர்வமாக திமுக தரப்பில் பேச்சுவார்த்தை தொடங்கக்கூடும் எனத் தெரிகிறது. இதனிடையே திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications