பொன்னி நதி பார்க்கணுமே.. ஈ + ஆரி + எச+ மாரி.. எவ்வளவு அழகான அர்த்தம் தெரியுமா? தித்திக்கும் தமிழ்!
சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பொன்னி நதி பார்க்கணுமே என்ற பாடலில் வரும் ''ஈ ஆரி எச மாரி'' என்ற வார்த்தையின் பின்னணியில் உள்ள அர்த்தத்தை அறிந்தால் நீங்கள் அசந்து போவீர்கள்.
உலகில் தமிழ் மொழியில் மட்டுமே இது போன்ற சிறப்புகளும், உயர்வுகளும் இருக்கிறது என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.
தமிழை பொறுத்தவரை ஒவ்வொரு வார்த்தைக்கும், எழுத்துக்கும் அர்த்தம் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது என்றே கூறலாம்.

பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் உருவாக்கத்தில் திரைக்கு வந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பொன்னி நதி பார்க்கணுமே என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. பொன்னி நதி பார்க்கணுமே.. ஈ ஆரி எச மாரி என வரும் அந்தப் பாடலில் 'ஈ ஆரி எச மாரி' என்றால் என்ன அர்த்தம் என்று யாராவது சிந்தித்துள்ளீர்களா. இதன் அர்த்தத்தை அறிந்தால் நீங்களே அசந்துபோவீர்கள்.

வில் வீரனின் இசை மழை
தமிழை பொறுத்தவரை ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அர்த்தத்தை காணலாம். ஐ என்றால் அழகு, கோ என்றால் அரசன், மா என்றால் மாடு என பல சிறப்புகளை தமிழ் மொழி பெற்றிருக்கிறது. அந்த வகையில் ஈ என்றால் ஈட்டி, வில் என்பதை குறிக்கும். ஆரி என்றால் வீரன் என்று பொருள். எச என்றால் இசை. மாரி என்றால் மழை. மொத்தத்தில் ஈ ஆரி எச மாரி என்றால் வில் வீரனின் இசை மழை என்று அர்த்தம். இப்போது புரிகிறதா அந்தப் பாடலில் இந்த வார்த்தையை ஏன் சேர்த்தார்கள் என்று.

தமிழின் அருமை பெருமை
தமிழை பொறுத்தவரை எதையும் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விட முடியாது. அப்படி ஒரு தனிச்சிறப்பு மிக்க மொழி நம் தமிழ் மொழி. சமீபநாட்களாக தமிழ் திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களில் தமிழின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியுள்ள இந்தக் காலகட்டத்தில் இப்படியொரு பாடலை இயற்றி நம்மை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன். தமிழின் பெருமைகளையும், அருமைகளையும் சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள்.

தமிழ் ஆர்வலர்கள்
இனி மேலாவது ஈ ஆரி எச மாரி என்றால் அதன் அர்த்தம் உங்களுக்கு புரியும் என நம்புகிறோம். இதனிடையே இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ள ஆர்.ஜே.அஞ்சனாவுக்கு உலகின் நாலாபுறமும் இருந்தும் தமிழ் ஆர்வலர்கள் நன்றியும், வாழ்த்தும் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.












Click it and Unblock the Notifications