விளக்கம் கேட்காமல் ஓபிஎஸ்ஸை நீக்கிட்டோமா? ஏன் ஓ.ராஜாகிட்ட இவர் ஏதாவது கேட்டாரா? எடப்பாடி தரப்பு வாதம்
ஓபிஎஸ் சகோதரரே விளக்கம் கேட்காமல் நீக்கப்பட்டார்- எடப்பாடி தரப்பு அனல் பறக்கும் வாதம்
சென்னை: விளக்கம் கேட்காமல் ஓபிஎஸ்ஸை நீக்கிவிட்டதாக சொல்கிறாரே, அன்று அவரது சகோதரர் ஓ.ராஜா எந்த விளக்கமும் கேட்காமல் நீக்கப்பட்டார் என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதத்தில் கூறியுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்து நீக்கினார். இதையடுத்து பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இதன் தீர்ப்பு வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 24 ஆம் தேதி நடத்தப்படுகிறது. இதை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் நீதிமன்றத்தை நாடினார்.

அவசர வழக்கு
அவசர வழக்காக இந்த வழக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (19 ஆம் தேதி) விசாரிக்கப்பட்டது. அப்போது விதிகளின்படி பொதுச் செயலாளர் தேர்தல் நடத்திக் கொள்ளலாம். ஆனால் அதன் முடிவுகள் தற்போது அறிவிக்கக் கூடாது என நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில் அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ஓபிஎஸ் வழக்கறிஞர்
இதில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக வாதங்களை முன் வைத்து வந்தார். இதையடுத்து தற்போது எடப்பாடி தரப்பு சார்பில் வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதிட்டு வருகிறார். அவர் கூறுகையில் தனக்கென தனிக் கட்சியை நடத்தி வருகிறார் ஓபிஎஸ். நாங்கள்தான் அதிமுக என சிலர் கூறுவது வாடிக்கைதான்.

புதிய நிர்வாகிகள்
எங்களை நீக்கி புதிய நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமித்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமிதான் இடைக்கால பொதுச் செயலாளர் என்பது உலகிற்கே தெரியும். பன்னீர் செல்வத்தின் சகோதரரே விளக்கம் கேட்காமல் நீக்கப்பட்டுள்ளார். பொதுக் குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உண்மையான அதிமுக
தாங்கள்தான் உண்மையான அதிமுக என்றால் தேர்தல் ஆணையத்தில் மக்கள் மன்றத்தில் நிரூபிக்க வேண்டும். கட்தி கட்டமைப்பின் முக்கிய அம்சமே பொதுக் குழு அதிகாரமிக்கது என்பதுதான். கட்சி நடவடிக்கைகளில் முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தது பொதுக் குழுதான். பொதுக் குழு முடிவுகளே இறுதியாநது. இந்த முடிவுக்கு கட்டுப்பட்டவர்களே கட்சியில் நீடிக்க முடியும்.

பொதுக் குழு
அதிமுக பொதுக் குழு நடந்து கொண்டிருந்த போதே அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் தரப்பினர் சூறையாடினர். கட்சியின் விதிகளை மாற்ற பொதுக் குழுவுக்கு அதிகாரம் உள்ளது. பொதுக் குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்திவிட்டது. விதிகளுக்கு உள்பட்டே பன்னீர் செல்வம் தரப்பு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. வலிமையான ஒற்றைத் தலைமை வேண்டும் என பெரும்பான்மையினர் கோரிக்கை விடுத்தனர்.

அனல் பறந்த வாதம்
அந்த கோரிக்கையின் பேரில்தான் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் ரத்து செய்யப்பட்டன. பொதுக் குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, எனவே பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது குறை கூற முடியாது. கட்சியினரின் குரலாக பொதுச் செயலாளர் தேர்தல் நடப்பதால் அதை தடுக்க முடியாது. வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுவதை வீழ்த்தும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு எடப்பாடி தரப்பு வாதம் செய்தது.












Click it and Unblock the Notifications