ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! ரவுடி திருவேங்கடம் மீது போலி என்கவுன்ட்டரா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
சென்னை: தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் ரவுடி திருவேங்கடம் போலி என்கவுன்ட்டர் செய்யப்பட்டாரா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக சட்டசபையில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காவல் துறையினருக்கு நிறைவேற்றுவதாக சொன்ன வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில் அமைதி, வளம், வளர்ச்சி என்ற நோக்கத்தோடு பொற்கால ஆட்சியை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தினார். ஆனால் தற்போது கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன. மூதாட்டிகளுக்கு கூட பாதுகாப்பில்லாத சூழல் நிலவும் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது.
தமிழகத்தில் எம். சாண்ட், ஜல்லி போன்ற கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. இந்த விலை உயர்வை குறைக்க போதிய அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு, குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் இவற்றின் விலையில் ஆயிரம் ரூபாய் குறைத்து விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "எம் சாண்ட் ஜல்லி விலையை யூனிட்டுக்கு ரூ 1900 உயர்த்திவிட்டு ரூ 1000 மட்டும் குறைத்திருப்பதாக சொல்வதை எப்படி ஏற்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், பொல்லாத ஆட்சிக்கு பொளாச்சியே சாட்சி. துயரமான ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி. அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.
ஊழல் வழக்குகளில் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழக உரிமைகளை அடகு வைத்தவர்கள். கடந்த 12 ஆண்டுகளில் 2024-ம் ஆண்டில்தான் கொலைகள் குறைவாக நடந்துள்ளன. 15,892 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் காவல்துறை மரணங்கள் அடியோடு குறைக்கப்பட்டுள்ளன என்றார் முதல்வர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவேங்கடம் கோர்ட்டில் பேசுவதை தடுக்க என்கவுன்ட்டர் செய்யப்பட்டாரா? உண்மை குற்றவாளியை காப்பாற்ற போலி என்கவுன்ட்டரா? ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்ற போது திருவேங்கடம் சுடப்பட்டதாக கூறப்பட்டது.
கொலைக்கு அரிவாள் பயன்படுத்திய நிலையில் திருவேங்கடம் எப்படி அரிவாள் வைத்திருந்தார்? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றார். மேலும் அதிமுகவினருக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் அப்பாவு, ஒரு மணி நேரம் பேசிவிட்டு வாய்ப்பே கொடுக்கவில்லை என சொல்வது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications