ஆடியோ சர்ச்சை.. அலட்டிக்கொள்ளாத எடப்பாடி! அந்த ”3 பேருக்கும்” பதவி - ஓபிஎஸ் தரப்பு “ஷாக்”
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.பி.முனுசாமி சதி செய்து வருவதாகவும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் எம்.எல்.ஏக்களை கையில் வைத்திருப்பதாக பொன்னையன் பேசியதாக ஆடியோ வெளியான நிலையில், மூவருக்குமே முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
Recommended Video
ஓபிஎஸ் தரப்பின் பல்வேறு முட்டுக்கட்டைகளை கடந்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு மேடையிலேயே மலர் கிரீடம், பூ மாலை, வாள் கொடுத்து தொண்டர்கள் மகிழ்ந்தனர். பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.

பொன்னையன் ஆடியோ
எடப்பாடி பழனிசாமி ஒரு வழியாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டாலும், பொதுக்குழு நிகழ்வுகள் குறித்த சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. அந்த வகையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பொன்னையனின் தொலைபேசி உரையாடலை பன்னீர்செல்வம் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். இதற்கு பொன்னையன் மறுப்பு தெரிவித்தாலும் அது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கே.பி.முனுசாமி மீது விமர்சனம்
குறிப்பாக "கே.பி.முனுசாமி திமுகவை விமர்சிப்பதில்லை என்றும், துரைமுருகன் உதவியுடன் குவாரியை பெற்று மாதம் 2 கோடி வருமானம் ஈட்டுகிறார் கே.பி.முனுசாமி. கொள்ளையடித்து கோடீஸ்வரனாக இப்படி ஆடுகிறார்கள். கே.பி.முனுசாமி நக்சலைட்டாக இருந்தவர். தேவாரம் டிஜிபி இதை சொன்னதால் ஜெயலலிதாவே அவரை ஒதுக்கினார். நாளை கே.பி.முனுசாமியும் ஒற்றைத் தலைமைக்கு வரலாம். அப்படி ஒரு முயற்சி நடக்கிறது." என்று பேசினார்.

வேலுமணி, சி.வி.சண்முகம்
அதேபோல், "சி.வி.சண்முகத்தின் சமுதாயத்தை சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் அவருக்கு ஆதரவாக உள்ளார்கள். கொங்கு மண்டலத்தை சேர்ந்த 42 எம்.எல்.ஏக்களில் எடப்பாடி பழனிசாமிக்கு 9 பேர்தான் ஆதரவு. மீதி இருக்கும் எம்.எல்.ஏக்களை தங்கமணியும், வேலுமணியும் தங்கள் கைகளில் வைத்து உள்ளார்கள். இதனால் எடப்பாடிக்கு வேறு வழியில்லை. முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக எடப்பாடி, வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் எல்லோரையும் கையில் வைத்துள்ளார்." என்று கூறினார்.

எடப்பாடி கொடுத்த ட்விஸ்ட்
பொன்னையன் பேசிய இந்த ஆடியோ அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எதிர்பார்த்தது. அது பெரும் விவாதப் பொருளானாலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ என்று தோன்றுகிறது. ஆடியோவில் இடம்பெற்ற கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் இன்று முறையே துணை பொதுச்செயலாளர், தலைமை கழக செயலாளர், அமைப்புச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதேபோல், பொன்னையன் அனைத்துல எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications