ஜெயலலிதா ஸ்டைலில் குட்டிக்கதை சொன்ன எடப்பாடி.. அந்த பெரியவர், விவசாயி, பொறாமைபிடித்த ஊழியர்கள் யார்?
சென்னை : ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சிக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமி சொன்ன 'குட்டிக்கதை' ஈபிஎஸ் ஆதரவாளர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில், நடப்பு நிகழ்வுகளோடு பொருத்தி, ஓபிஎஸ்ஸை விமர்சித்து குட்டிக்கதை சொல்லியுள்ளார் ஈபிஎஸ்.
பாஜக தலைமை, ஓபிஎஸ்ஸொடு இணக்கமாகச் செல்ல, எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தி வருவதாகச் சொல்லப்படும் நிலையில், ஓபிஎஸ்ஸை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி கதை சொல்லியுள்ளதால், பாஜகவின் பேச்சைக் கேட்கத் தயாராக இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி உணர்த்தியுள்ளார் என்கிறார்கள்.

ஜெயலலிதா மாடல்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தனது உரையில் ஏதேனும் குட்டிக்கதைகள் கூறுவது வழக்கம். அன்றைய கூட்டத்திற்குத் தக்கவாறும், மறைமுகமாக அரசியல் நிகழ்வுகளைக் குறிப்பிட்டும், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் வகையிலும் கருத்தை உணரவைக்கும் வகையில் ஜெயலலிதாவின் குட்டிக் கதைகள் அமையும். ஜெயலலிதா சொல்லும் குட்டிக் கதைகள் தொண்டர்கள் மத்தியில் பிரசித்தம். இப்போது அதே ஃபார்முலாவை கையில் எடுத்திருக்கிறார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

ஈபிஎஸ் - கிறிஸ்துமஸ்
அதிமுக சார்பில் சென்னை வானகரத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், "அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் கிறிஸ்துவ மக்களின் புனிதத் தளமான ஜெருசலேம் சென்று வர கிறிஸ்துவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குயிக்கிற்கு மாபெரும் மணிமண்டபம் அமைத்து அதை ஜெயலலிதா திறந்து வைத்தார்.

கிறிஸ்தவர்களுக்காக அதிமுக
இந்திய நாட்டின் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவிக்கு சிறுபான்மை சமூகத்தினர் வரவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தேர்தலில் போட்டியிட்ட அப்துல்கலாமை முன்மொழிந்தவர் ஜெயலலிதா. அதிமுக கொண்டு வந்த திட்டத்தை இனி எந்த அரசாலும் கொண்டுவர முடியாது. தமிழகத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா இரு பெரும் தலைவர்கள் தான் ஏழைகளுக்காக வாழ்ந்து மறைந்தவர்கள். அவர்கள் போல் நாமும் வாழ வேண்டும். ஏழைகள் இல்லை என்ற நிலையை கொண்டு வருவது தான் அதிமுகவின் நிலைப்பாடு." என்றார். தொடர்ந்து ஜெயலலிதா பாணியில் ஒரு குட்டிக்கதை சொன்னார் ஈபிஎஸ்.

எடப்பாடி சொன்ன குட்டிக்கதை
"இந்த நேரத்தில் ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் நல்ல உள்ளம் கொண்ட பெரியவர் வாழ்ந்து வந்தார். அவர் தனக்குச் சொந்தமான நிலத்தில் தனது ஊழியர்கள் மூலம் விவசாயம் செய்து வந்தார். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை ஊர் மக்களுக்கு தானம், தர்மம் செய்வதையும் தலையாய கடமையாகக் கொண்டிருந்தார். இதனால் அப்பகுதி மக்கள் அவர் மீது அன்பும் மரியாதையும் வைத்திருந்தனர். சில காலங்கள் சென்றதும் அப்பெரியவர் வயது முதிர்வின் காரணமாக நோயுற்றார்.

ஒரு விவசாயி
மரணப்படுக்கையின் போது தன் காலத்திற்குப் பின் தன் பொறுப்பிற்கு வருபவர் தன்னைப்போலவே தொடர்ந்து இப்பகுதி மக்களின் மேல் அன்பு காட்டக் கூடியவராகவும் உதவி செய்பவராகவும் இருக்க வேண்டும் என எண்ணினார். தனது விருப்பத்தைத் தனது ஊழியர்களிடம் தெரிவித்தார். அப்பெரியவரின் மறைவிற்குப் பிறகு ஒரு நல்ல மனிதருக்கு அந்தப் பெரியவரின் பொறுப்புகள் சென்றடைந்தன. அப்படி தேர்வு செய்யப்பட்ட மனிதர் ஒரு விவசாயி. அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை உண்மையாகவும் ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் செய்துவந்தார்.

துரோகிகள்
விவசாயத்தில் கிடைத்த பலன்கள் ஊர் மக்களுக்குச் சென்றடைய உண்மையாக உழைத்தார். இதனைக் கண்டு பொறாமை குணம் கொண்ட சில ஊழியர்கள் அந்த விவசாயியின் வேலைகள் தடைப்படும் படியும் பெரியவரின் விருப்பம் நிறைவேறாத வகையிலும் சில சதி வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், பெரியவரின் பொறுப்பிற்கு வந்த அந்த விவசாயி அவற்றைக் கவனமுடன் கையாண்டு பொறுமையாக வேலைகளைச் செய்து துரோகம் செய்த சிலரை அப்புறப்படுத்துகிறார். விளைச்சலை மேம்படுத்துகிறார். நாட்கள் செல்கின்றன. பயிர்கள் வளர்ந்து அறுவடை செய்யப்பட்டு பெரியவரின் எண்ணப்படியே அனைத்து மக்களும் மகிழும்படி பிரித்துக் கொடுத்தார்." எனக் கதையை பாசிட்டிவாக முடித்தார் ஈபிஎஸ்.

ஓபிஎஸ் மீது தாக்கு
எதிர்க்கட்சிகளை விமர்சிக்க ஜெயலலிதா குட்டிகதை சொல்வது போல, ஜெயலலிதாவை, வயது முதிர்ந்த பெரியவராகவும், தன்னை விவசாயியாகவும், அதிமுகவை விவசாய நிலமாகவும், களையாக முளைத்து விளைச்சலைக் கெடுக்கும் ஊழியர்களாக ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரையும் உருவகப்படுத்தி எடப்பாடி பழனிசாமி சொன்ன இந்தக் குட்டிக் கதை, ஈபிஎஸ் ஆதரவாளர்களைக் கவர்ந்துள்ளது.

சூசக மெசேஜ்
பாஜக தலைமை, ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுமாறு எடப்பாடிக்கு அறிவுறுத்தி வருவதாகச் சொல்லப்படும் சூழலில், மீண்டும் அவரை விமர்சித்து ஈபிஎஸ் கதை சொல்லியுள்ளதன் மூலம், பாஜகவின் விருப்பத்தை ஏற்றுக்கொள்ளவில்லை எனக் காட்டியுள்ளார் என்கிறார்கள். மேலும், கதை சொல்வதில் ஜெயலலிதா மாடலை பின்பற்றியுள்ளதால், ஜெ. "மோடியா? லேடியா?" என முழங்கியது போல, ஈபிஎஸ்ஸும் பாஜகவுக்கு எதிராக விரைவில் போர்க்கொடி தூக்குவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications