5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு.. காலை 7 மணிக்கு தொடங்கியது..!
7 பூத்களில் இன்று மீண்டும் மறுவாக்குப்பதிவு நடந்து வருகிறது
சென்னை: இன்று 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில், காலை 7 மணிக்கு மறுவாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
இதில் மாநிலம் முழுவதும் 60.70 % வாக்குகள் பதிவாகியுள்ளன... இவைகளில் குறைந்தபட்சமாக சென்னையில் 43.59% வாக்குகள் மட்டுமே பதிவானது.

இயந்திரங்கள்
வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிக்குள் வைத்து மூடி சீல் வைக்கப்பட்டன.. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. மேலும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை அதாவது பிப்ரவரி 22ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மறுவாக்குப்பதிவு
இந்நிலையில், 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்றைய தினம் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.. சென்னை, மதுரை, திருவண்ணாமலை, அரியலூர், மாவட்டங்களில் உள்ள வார்டுகளில் மறுவாக்குப்பதிவு என்று அறிவிக்கப்பட்டது.. காரணம், வாக்குப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டது, கள்ள ஓட்டு தொடர்பான புகார்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது..

5 இடங்கள்
அதன்படி தமிழகத்தில் கீழ்க்கண்ட 5 வார்டுகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டையில் வார்டு எண் 51, வாக்குச்சாவடி எண். 1174, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பெசன்ட் நகர், ஓடைக்குப்பம் பகுதியில் உள்ள வார்டு எண் 179, வாக்குச்சாவடி எண் 5059, மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் வார்டு எண் 17, வாக்குச்சாவடி எண் 17 பெண், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் வார்டு எண் 16, வாக்குச்சாவடி எண் 16ஆண்,16 பெண், திருவண்ணாமலை நகராட்சியில் வார்டு எண் 25, வாக்குச்சாவடி எண். 57 ஆண், 57 பெண் ஆகிய இடங்களாகும்.

7 மணி முதல் 6 மணி வரை
இன்று காலை 7 மணிக்கு இங்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.. இன்று மாலை 6 மணி வரை வாக்கு பதிவு நடைபெறும்.. கடைசி ஒரு மணி நேரமான 5 மணி முதல் 6 மணிவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது... மறுவாக்குப்பதிவு அளிக்கும் வாக்காளர்களுக்கு நடு விரலில் அழியாத மை வைக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications