தமிழக சட்டசபை தேர்தல்: 2 ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் பணிக்கு இடமாற்றம்... தேர்தல் ஆணையம் அதிரடி
சென்னை: தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. அதன்படி 2 ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் பணிக்கு இடமாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க திமுக கூட்டணி முயன்று வருகிறது.

அதேவேளையில் திமுகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர், விஜயின் தவெக கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இடமாற்றம்
இது ஒருபுறம் இருக்க சட்டசபை தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கான பணியை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் இந்திய தேர்தல் ஆணையம் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்தல் பணிக்கு இடமாற்றம் செய்துள்ளது. இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2 ஐஏஎஸ்கள் யார் யார்?
அதன்படி சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி சிவஞானம் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், தமிழ்நாடு மின் ஆளுமை முகமைஇணை இயக்குநர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் இணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் செயல்பட்டு வருகிறார். இந்த அதிகாரிகள் அவருடன் சேர்ந்து செயல்பட உள்ளனர்.
தேர்தல் தேதி எப்போது?
தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கான தேர்தல் இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடத்துவதற்கான பணியை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.
அதன்படி சட்டசபை தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் முதுநிலை துணைத் தேர்தல் ஆணையர்கள் மணீஷ் கார்க், பவன் குமார் சர்மா மற்றும் துணை தேர்தல் ஆணையர்கள் சஞ்சய் குமார், பானு பிரகாஷ் யெத்துரு, தலைமை இயக்குநர் (ஊடகம்) ஆஷிஷ் கோயல் உள்ளிட்டோர் அடங்கிய 7 பேர் குழு சென்னை வந்தது.
ஆலோசனை
இந்த குழுவினர் நேற்று மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில், மத்திய அரசு துறைகளான வருமான வரித்துறை, சுங்கத்துறை, ரயில்வே, சிஆர்பிஎஃப் உள்ளிட்ட துணை ராணுவப் படைப்பிரிவுகள், அஞ்சல் துறை, சிவில் விமான போக்குவரத்துத் துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் ஓட்டலில் ஆலோசனை நடத்தினர்.
இறுதி வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடிகள் அமைப்பது, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையை தொடர்ந்து இன்று 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணிக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணிஇடமாற்றம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications