தவெக தலைவர் விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு.. ஆட்டத்தை ஆரம்பித்த ஆதவ் அர்ஜுனா? பரபர தகவல்
சென்னை: தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய் - பிரசாந்த் கிஷோர் இடையேயான இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கட்சி மாநாட்டை நடத்தியுள்ள விஜய் அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். வரும் மார்ச் மாதம் முதல் அவர் சுற்றுப்பயணம் செல்லலாம் என்று சொல்லப்படுகிறது.

அதற்கு முன்பாக கட்சி நிர்வாகிகள் நியமிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பூத் வாரியாக நிர்வாகிகளை நியமிக்கவும் விஜய் தவெகவினருக்கு உத்தரவிட்டுள்ளார். விஜய் கட்சியில் அண்மையில் ஆதவ் அர்ஜூனா இணைந்தார். அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. தவெகவில் வியூக வகுப்பாளராக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து ஆதவ் அர்ஜூனா செயல்படுவார் என விஜய் கூறியிருந்தார்.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், விஜய்யை சந்தித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. ஐபேக் நிறுவனம் மூலம் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக பணிகளில் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டு வந்தார். 2021 ஆம் ஆண்டுக்கு பிறகு இவரது நிறுவனம் எந்த ஒரு கட்சிக்கும் தேர்தல் வியூக பணிகளில் ஈடுபடவில்லை.
எனினும், விஜய்யை சந்திக்க பிரசாந்த் கிஷோர் துவக்கத்தில் இருந்தே ஆர்வம் காட்டியதாக சொல்லப்படுகிறது. அதாவது, விக்கிரவாண்டி மாநாடு நடப்பதற்கு முன்பே பிரசாந்த் கிஷோர், விஜய்யை சந்திக்க நேரம் கேட்டதாக சொல்லப்படுகிறது. எனினும் அப்போது இந்த சந்திப்பு நடைபெறவில்லை. இந்த சூழலில் தற்போது விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
தவெகவின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. பிரசாந்த் கிஷோர் தற்போது பீகாரில் தனியாக கட்சி தொடங்கி நடத்தி வருகிறார். இதனால், பிரசாந்த் கிஷோர் நேரடியாக தேர்தல் வியூக பணிகளில் ஈடுபடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேவேளையில், வாய்ஸ் ஆப் காமன்ஸ் நிறுவனத்தின் வியூகம் அமைப்பதற்கான பணிகளில் மட்டும் பிரசாந்த் கிஷோர் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான முதல் ஆலோசனைக் கூட்டமாக இது இருக்கலாம் எனவும் பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது ஜான் ஆரோக்கியசாமி, தவெக பொதுச்செயலாலர் ஆனந்த் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய் - பிரசாந்த் கிஷோர் இடையேயான இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications