நெருங்கும் தேர்தல்.. களத்தில் எடப்பாடி பழனிசாமி! சுற்றுப்பயணம் எந்த அளவுக்கு கை கொடுக்கும்?
சென்னை: தமிழகத்தில் இன்னும் எட்டு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை நாளை தொடங்குகிறார். இது கட்சியின் வாக்கு வங்கியை அதிகரிக்க எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்று கேள்வி எழுந்திருக்கிறது.
ஜெயலலிதா இருந்த வரை தமிழகத்தில் அதிமுகவுக்குதான் வாக்கு வங்கி அதிகமாக இருந்தது. அவருக்கு பின்னர் வந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வராக இருந்த காலத்தில் வாக்குகள் கொஞ்சம் சரிந்தாலும், பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால் சமீப காலமாக கூட்டணி கணக்குகளால் அதிமுக ரொம்பவே சோர்வாகியுள்ளது.

இந்நிலையில், சோர்வை நீக்கி கட்சியினரை உற்சாகப்படுத்தி தேர்தல் களத்திற்கு முழு வேகத்தில் அவர்களை தயார்படுத்தும் பணியில் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார். இதற்காக நாளை முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.
ஜூலை 7ம் தேதி தொடங்கி, 21ம் தேதி வரை எடப்பாடி சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இந்த பயணத்தில் 34 தொகுதிகளில் மக்களையும் கட்சியின் நிர்வாகிகளையும் சந்திக்கிறார். கோவையில்தான் இந்த பயணம் நாளை தொடங்குகிறது. கோவை நல்ல தொடக்கம்தான். கொங்கு மாவட்டங்களின் மையமாகவும், பாஜக ஆதிக்கமும் சற்று இருக்கும் இடம் இது. எனவே இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் கோவை முதல் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
கோவையில் தொடங்கும் பயணம் கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் என மொத்தம் 7 மாவட்டங்களில் நீள்கிறது. டெல்டா மாவட்டங்களில் அதிமுகவுக்கு என பெரியதாக வாக்கு வங்கி கிடையாது. இருப்பினும் இது வெறும் தொடக்கம்தான். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கொங்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி தீவிரப்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் இந்த தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இருப்பதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. நமக்குதான் தனியாக வாக்கு வங்கி இருக்கிறதே எதற்காக பாஜகவுடன் கூட்டணி என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், கட்சியின் சின்னம், பொதுச் செயலாளர் பொறுப்பு உள்ளிட்டவற்றில் பிடி பாஜகவிடம் இருப்பதால்தான் இந்த கூட்டணி கணக்கு என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். சரி எது எப்படியோ இந்த தேர்தலில் அதிமுகவுக்கு எடப்பாடியின் சுற்றுப்பயணம் கை கொடுக்குமா? என்பது கேள்வி.
அதேபோல இந்த தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணியின் நிலை என்ன என்றும் கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த தேர்தலில் தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருந்தது. அப்போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை தொகுதி என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்தில் மாநிலங்களவைக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அது தேமுதிகவுக்கு ஒதுக்கப்படவில்லை. எனவே அக்கட்சி அதிருப்பதியில் இருக்கிறது.
இதனையும் சமாளித்து எடப்பாடி தேர்தலில் கொடியை நாட்டுவாரா என்று கேள்வி எழுந்திருக்கிறது. எடப்பாடி தலைமையேற்ற பின்னர் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த தேர்தலில் பெற்றிப்பெற்று தன்னுடைய தலைமையை எடப்பாடி நிரூபிப்பாரா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
திமுக தலைமையிலான தமிழக அரசு சில விஷயங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. குறிப்பாக காவல்நிலைய மரணங்கள் தொடர்பான விவகாரம் திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதி, பழைய பென்சன் திட்டம், நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதீத ஆர்வம் உள்ளிட்டவை திமுக கூட்டணி கட்சிகளாலே எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இந்த அதிருப்பதியை அதிமுக சரியாக பயன்படுத்திக்கொள்ளுமா? என்றும் கேள்வி எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications