பாஜகவுக்கு பல்பு.. ‘பிரம்மாண்ட’ கட்சிக்கு எடப்பாடியின் கணக்கு! ‘கை’ கொடுக்குமா? இது பெரிய ட்விஸ்ட்!
சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் மாறி வருகிறது. திமுகவுடன் திடீரென காங்கிரசுக்கு மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் விஜயின் தவெக, காங்கிரஸ், பாமக அடங்கிய மூன்றாவது கூட்டணி உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தை கூட்டணியில் சேர்க்க பாஜகவை எடப்பாடி பழனிச்சாமி கழற்றிவிடும் முடிவுக்கு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பிரம்மாண்ட கட்சி என எடப்பாடி குறிப்பிட்டது விஜய் கட்சியை தான் என்கின்றனர் அதிமுகவினர்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வருகிறது. மாவட்டம் தோறும் கள ஆய்வு என சென்றாலும் ரோட் ஷோ மற்றும் நிகழ்ச்சிகளில் தேர்தல் பிரச்சாரத்தை போலவே தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவர் ஆன மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிகாரப்பூர்வமாக 2026 தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவக்கி விட்டார். கோவையில் தொடங்கிய பிரச்சார பயணம் விழுப்புரம், கடலூர் கடந்து தற்போது மயிலாடுதுறைக்கு வந்திருக்கிறது.

இப்படியாக தமிழகத்தில் இரு பிரதான கட்சிகள் தேர்தல் வேலைகளை துவக்கி விட்ட நிலையில், பிற கட்சிகள் கூடுதலாக சீட்டு கேட்டு பெரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. கடந்த தேர்தல்களில் இல்லாத வகையில் தற்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. 2026 தேர்தலை நிச்சயம் இரண்டு காங்கிரஸ்காரர்கள் அமைச்சர்களாக இருப்பார்கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி. அதனை செல்வப் பெருந்தகையும் வரவேற்றுகிறார். மேலும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 2026 இல் ஆட்சி அதிகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பங்கு வகிக்கும் எனக் கூறியிருக்கிறார். இதனால் தமிழக வெற்றி கழகம் தரப்பு உற்சாகம் அடைந்திருக்கிறது.
காரணம் கட்சியின் முதல் மாநாட்டின் போதே ஆட்சி அதிகாரத்தில் பங்கு கூட்டணி ஆட்சிக்கு தயார் என விஜய் பேசி இருந்தார். இந்த நிலையில் காமராஜர் விவகாரம் திமுக காங்கிரஸ் இடையே பிளவை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் எம்பிக்களும் எம்எல்ஏக்களும் சில மூத்த தலைவர்களும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என கூறி வருகின்றனர். இதனால் தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் எனவும், பாட்டாளி மக்கள் கட்சியும் அந்த கூட்டணிக்கு வரலாம் என சொல்லப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க பாஜக அதிமுக கூட்டணி பிரச்சனையில் சிக்கித் தவிக்கிறது. கூட்டணி ஆட்சி என பாஜக தலைமை சொல்ல, அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என உறுதியாக சொல்லி வருகிறார் எடப்பாடி. இதனால் கரங்கள் இணையம் தாலும் இதயங்கள் இணையவில்லை என்ற நிலையே இருக்கிறது. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கூட்டணிக்கு பிரம்மாண்ட கட்சி ஒன்று வருகிறது எனக் கூறியிருந்தார்.
அவர் சொல்வது தமிழக வெற்றிக் கழகத்தைத்தான் என்கின்றனர் அதிமுகவினர். அரசியல் விமர்சகர்களும் அதனையே குறிப்பிடுகின்றனர். ஆனால் பாஜக உடனோ அல்லது பாஜக இருக்கும் கூட்டணி உடனோ சமரசத்திற்கு இடமில்லை என தமிழக வெற்றி கழகம் திட்டவட்டமாக கூறியிருக்கிறது. விஜயும் அதனை உறுதிப்பட சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் விஜய் வரவுக்காக பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிடும் முடிவுக்கு எடப்பாடி வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் தேமுதிக, பாமக, காங்கிரஸ் கட்சிகளையும் அதிமுக கூட்டணிக்கு இழுக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
அதிமுகவை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணியில் இருப்பது மட்டுமே அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு என தனித்த பெரிய வாக்கு வங்கி இல்லாத நிலையில், வட மாவட்டங்களில் வலுவாக இருக்கும் பாமக, விஜயின் சினிமா வெளிச்சம், காங்கிரசின் சிறுபான்மை வாக்குகள் ஆகியவை அதிமுகவுக்கு வந்தால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் என்பது எடப்பாடியின் கணக்கு.
அதை நோக்கிய அவரது அரசியல் நகர்வுகளும் இருக்கிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். அதே நேரத்தில் துணை முதலமைச்சர், 80 சீட்டுகள் என விஜய் பிடிவாதமாக இருப்பதும் எடப்பாடிக்கு சற்று நெருக்கடியான விஷயம்தான் என்றாலும், பேச்சுவார்த்தைகள் மூலம் அதை சமூகமாக தீர்க்கப்படும் என்கின்றனர் அதிமுக சீனியர்கள்.












Click it and Unblock the Notifications