ஓ பன்னீர் செல்வத்துக்கு அடுத்த ‛செக்’.. டிஜிபி அலுவலகத்தில் ஜெயக்குமார் பரபர புகார்.. என்னாச்சு?
சென்னை: அதிமுகவில் ஒன்றாக செயல்பட்ட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் தற்போது தனித்தனியாக செயல்படுகின்றனர். இந்நிலையில் தான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது தரப்பினருக்கு எதிராக பரபரப்பான புகாரை அளித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வந்தனர். கடந்த ஆண்டு கட்சியில் ஒற்றை தலைமை விஷயத்தில் பெரிய பிரளயமே வெடித்தது. இதைடுத்து பொதுக்குழு கூட்டம் மூலம் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். இதனால் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக இயங்கி வருகிறார். இருப்பினும் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது தரப்பினர் தொடர்ந்து அதிமுகவின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் சேலத்தில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு அதிமுக கொடியை பயன்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பு புகார் அளித்தது. ஆனால் இந்த புகாரில் ஓ பன்னீர் செல்வம் தரப்பினரை விட்டுவிட்டு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் சென்னைி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
மேலும் அந்த புகாரில் ஓ பன்னீ்ர செல்வம் மற்றும் அவரது தரப்பினர் அதிமுகவின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது தேர்வை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுக்குழுவால் நீக்கப்பட்ட ஓபிஎஸ், வைத்திலிங்கம் போன்றோர் அதிமுக கொடியையோ அதிமுக என்ற பெயரை பயன்படுத்த கூடாது. போஸ்டரில் கூட அதிமுக என்ற பெயர், கட்சியின் சின்னம், கட்சியின் கொடி ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது.
ஆனால் அந்த உத்தரவுகளை எல்லாம் மீறி 'சட்டத்தை நாங்கள் மதிக்கமாட்டோம் சட்டம் என்ன செய்யும்' என்ற வகையில், தான் தோன்றித் தனமாக செயல்பட்டு வருகின்றனர். எம்ஜிஆர் மாளிகையின் முகவரியை அவ்வை சண்முகம் சாலை என்ற அலுவலகத்தினை லெட்டர் பேடில் பயன்படுத்துவது முழுவதுமாக சட்ட விரோதம். குழப்பத்தை ஏற்படுத்தவே இதுபோன்று செயல்படுகின்றனர்.
சேலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளது. எங்கள் கட்சியின் கொடி, சின்னம் போன்றவற்றை பயன்படுத்தியதற்கு நாங்கள் புகார் அளிக்கிறோம். அதில் எங்களது கட்சிக்காரர்களையே அழைத்துச் சென்று விசாரிப்பதெல்லாம் நியாமில்லை. கொஞ்சம் கூட நியாயமற்ற செயல்'' என்றார்.












Click it and Unblock the Notifications