Exclusive: அதிமுக+ விஜய்.. விசிகவின் கூட்டணி வியூகம் இதுதான்! பகிரங்கமாக போட்டுடைத்த சங்கத் தமிழன்!
சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்த இருக்கும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு அண்ணா திமுகவை மட்டுமல்ல நடிகர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மது மற்றும் புகை பிடிக்கும் பழகத்துக்கு எதிராக பேசியதால் நடிகர் ரஜினிகாந்தையும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அழைப்பதான அதன் இளைஞர் அணி மாநிலச் செயலாளர் சங்கத் தமிழன் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக நமது ஒன் இந்தியா தமிழுக்கு சங்கத் தமிழன் அளித்த சிறப்பு நேர்காணல்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு நாங்கள் அண்ணா திமுகவை மட்டும் அழைக்கவில்லை. நடிகர் விஜய்யையும் நாங்கள் அழைக்கிறோம். விசிக இளைஞரணி சார்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் இந்த மாநாட்டுக்கு அழைக்கிறோம். மதவாத பாஜக, ஜாதியவாத பாமக தவிர அனைத்துக் கட்சிகளையும் விசிக அழைக்கிறது.

அன்புமணிக்கு அழைப்பு: பாமக தலைவர் அன்புமணி, மது ஒழிப்பில் தீவிரம் காட்டுகிறார். அதே அளவுக்கு ஜாதி மீது பற்றில்லாமல், குடிசைகளுக்கு தீவைக்காமல் ஒழுக்கமாக இருந்து மக்களைப் பாதுகாப்பேன் என வந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கும்.
அதிமுக கூட்டணியில் 30 தொகுதிகளா?: அதிமுக கூட்டணியில் விசிகவுக்கு 30 தொகுதிகள், துணை முதல்வர் பதவி தர தயாராக இருக்கின்றனரா என்கிற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. மது விலக்கு, மது ஒழிப்பில் அக்கறை இருந்தால் திமுக இளைஞரணிச் செயலாளரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் கூடத்தான் எங்கள் மாநாட்டுக்கு வாருங்கள் என அழைப்பு விடுக்கிறோம்.
அரசியல் தலைவர்கள் குறித்து முடிவு: மது ஒழிப்பு மாநாட்டுக்கு எந்தெந்த அரசியல் தலைவர்களைக் கூப்பிடுவது என்பது தொடர்பாக விசிகவின் உயர்நிலைக் குழு கூட்டம் கூடி முடிவு செய்ய இருக்கிறது. செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குதான் அதிமுகவுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் கட்சியின் தலைவர் திருமாவளவன்.
தள்ளாடுதே தமிழ்நாடு: தமிழ்நாடு மாலை நேரமானவுடன் போதையில் தள்ளாடுகிறது. இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு வேண்டும். சின்ன சின்ன பிள்ளைகள் கூட பள்ளிக்கூடத்தில் பீர் குடிக்கிற காட்சிகளைப் பார்க்கிறோம். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இத்தகைய அவலமான நிலைமை இருக்கிறது.
புரட்சிக்கு அழைக்கிறோம்: திமுகவுக்கும் விசிகவுக்கும் எந்த மோதலும் இல்லை; அதிருப்தியும் இல்லை. 2026 தேர்தல் நடைபெறும் போது தேர்தல் குறித்து பார்த்துக் கொள்ளலாம். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகளுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு.கல்லூரிகளில் சோதனை செய்கிற போது பெண் பிள்ளைகள் போதை வஸ்துகளைப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலைமையில் நாம் அமைதியாக இருக்க முடியுமா? நக்சல்பாரி கிராமத்தில் இருந்து புரட்சி எப்படி வெடித்ததோ அதுபோல கள்ளச்சாராய சாவுகள் நிகழ்ந்த கள்ளக்குறிச்சியில் இருந்து மக்களை புரட்சிக்கு அழைக்கிறோம்.
குறைவான சீட்தான் கொடுத்த திமுக: மது ஒழிப்பு மாநாட்டை நடத்தும் போது அதற்கு அரசியல் சாயம் பூசுவது வன்மையான கண்டனத்துக்குரியது. லோக்சபா தேர்தலில் 3 சீட் கேட்டோம்.. 2 சீட்தான் கொடுத்தது திமுக; சட்டசபை தேர்தலில் 10 சீட் கேட்டோம்.. 6 சீட்தான் கொடுத்தது திமுக.. அமைதியாக ஏற்றுக் கொள்ளத்தானே செய்தது விசிக.
தேர்தலுக்கான மாநாடா?: 2026 தேர்தலில் சீட் பேரத்தை அதிகரிக்கத்தான் இந்த மதுஒழிப்பு மாநாடு? அதிமுக அழைப்பா? எனில் அப்படி ஒரு எண்ணமே விசிகவுக்கு இல்லை. தேர்தலைப் பற்றி எங்களுக்கு கவலையும் இல்லை. தேர்தலில் வெல்லலாம்; தோற்கலாம்.
திருமாவளவனுக்கு அதிமுக வலை: அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக, திருமாவளவனை இழுப்பதற்காக ஜெயக்குமார் போன்றவர்கள் வலையை விரிக்கலாம். சிறுத்தைகள் வலையில் சிக்குவது போல தோன்றலாம்... ஆனால் வலைகளில் சிறுத்தைகள் சிக்காது. மது ஒழிப்பு மாநாடு என்பது மக்களுக்கானதுதான்.
இலவசங்கள் வழங்க கூடாது: இலவசங்கள் வேண்டாம்... மதுவை ஒழித்தால் போதும் என்பதில் விசிக உறுதியாக உள்ளது. மதுவை ஒழித்தால் கள்ளச்சாராயம் வரும் என சொல்லக் கூடாது.. அரசுதான் அதையும் தடுக்க வேண்டும். பீகாரில் மது விலக்கு அமலுக்குப் பிறகு பெண்கள் மீதான வன்கொடுமை குறைந்துள்ளது என்கிறார்கள். ஜாதிய ஆணவப் படுகொலைகள் குறைந்துள்ளது என்கின்றனர்.
நடிகர் விஜய்க்கு பாராட்டு: நடிகர் விஜய் நல்ல நடிகர். அவர் இன்று அரசியலுக்கு வருகிறார்.. அவருக்கு பல இடைஞ்சல்களை பலர் கொடுக்கின்றனர். நடிகர் விஜய் நல்ல எண்ணத்தில் மக்களுக்காக அரசியலுக்கு வருகிறார். ரூ200 கோடி, ரூ300 கோடி சம்பளத்தை விட்டுவிட்டு நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் எனில் ஒரு நல்ல எண்ணம்தான். அதை நாங்களும் நம்புகிறோம்.
வாயை அடைத்துக் கொண்டு இருக்கனுமா?: பாமக போல சாகும் வரை திமுக கூட்டணியில்தான் இருப்போம் என விசிக எப்போதும் சொன்னதும் இல்லை. அண்ணா திமுக கூட்டணியில் ஏற்கனவே விசிக இடம் பெற்றிருந்தது. எங்களுக்கு கொள்கை கோட்பாடுதான் முக்கியம். திமுகவின் கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக நாங்கள் வாய் அடைத்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டுமா? விசிக அப்படி எல்லாம் இருக்காது. யாராக இருந்தாலும் நாங்கள் கேட்போம். இவ்வாறு சங்கத் தமிழன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications