பிஎப் கணக்கில் இருந்து 25% பணம் எடுக்கவே முடியாதா? புதிய ரூல்ஸ் சொல்வது என்ன? வெளியான விளக்கம்
சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள 25 சதவீத தொகை எடுக்கமுடியாது. இது சம்மந்தப்பட்ட தொழிலாளர்கள் ஓய்வுபெறும் வரை எடுக்கமுடியாத அளவுக்கு, அவர்கள் கணக்கிலேயே வைக்கப்பட்டு இருக்கும் என்று தகவல் வெளியாகி வருகிறது. இது தொழிலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிஎப் திட்டம் மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படும். அதே அளவிலான அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் மூலம் குறிப்பிட்ட தொகையும் செலுத்தப்பட்டு வருகிறது.

100% வரை பணத்தை எடுக்க முடியும்
வருங்கால வைப்பு நிதியில் உள்ள குறிப்பிட்ட தொகையை ஊழியர்கள் தங்கள் அவசர தேவைகளுக்கு எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்த விதிகளில் ஊழியர்களின் நலன் கருதி அவ்வப்போது புதிய திருத்தங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்பின் 238-வது அறங்காவலர்கள் குழு கூட்டம் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பிஎப் பணத்தை திரும்ப எடுப்பதற்கான விதிகளை மேலும் எளிதாக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, தொழிலாளர்கள் தங்கள் அவசர தேவைகள், அதாவது, மருத்துவம், கல்வி, திருமணம், வீடு, சிறப்பு சூழ்நிலைகள் ஆகிய காரணங்களுக்கு சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள ஊழியர் மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு உட்பட, 100% வரை பணத்தை எடுக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
25 சதவீத பணத்தை கூட எடுக்க முடியாதா?
இதற்கு முன்பாக பிஎப் பணத்தை திரும்ப எடுப்பதில் 13 வகையான விதிகள் இருந்தன. தற்போது அவை ஒருங்கிணைக்கப்பட்டு மூன்று விதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு திருமணம், கல்வி செலவுக்கு மூன்று முறை மட்டுமே பிஎப் சேமிப்பில் இருந்து பணத்தைப் பெற முடியும். தற்போது, கல்விக்கு 10 முறை வரையிலும், திருமணத்திற்கு 5 முறை வரையிலும் பணம் எடுக்க முடியும் என்று மாற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு அவசர காலத்தில் பணத்தேவையை பூர்த்தி செய்ய விரும்பும் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒருபக்கம் இருக்க, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள 25 சதவீத தொகை எடுக்க முடியாது. இது சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் ஓய்வுபெறும் வரை எடுக்க முடியாத அளவுக்கு, அவர்கள் கணக்கிலேயே வைக்கப்பட்டு இருக்கும் என்று தகவல் பரவி வருகிறது.
தொழிலாளர்கள் அதிருப்தி
இது தொழிலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய அரசின் தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது:-
மத்திய அரசு விளக்கம்
55 வருட சேவையை முடித்துவிட்டு ஓய்வு பெறுதல், உடல்நலக்குறைவு ஏற்பட்டு நிரந்தர இயலாமை, பணமதிப்பிழப்பு, பணிக்காலம் முடியும் முன்பு விருப்ப ஓய்வு பெறுதல் அல்லது இந்தியாவை விட்டு நிரந்தரமாக வெளியேறி வெளிநாடுகளில் குடியுரிமை பெறுதல் போன்ற சில நிபந்தனைகளின் கீழ் குறைந்தபட்ச இருப்பு 25 சதவீதம் உட்பட வருங்கால வைப்பு நிதி தொகையை முழுமையாக திரும்ப பெற முடியும்.
இதேபோல் 12 மாதங்கள் தொடர்ச்சியாக வேலை இல்லாமல் இருந்தாலும் குறைந்தபட்ச இருப்பு 25 சதவீதம் உட்பட வருங்கால வைப்பு நிதி தொகையை முழுமையாக திரும்ப பெற எளிய விதிகள் அனுமதிக்கின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications