கூட்டம் சும்மா அள்ளுது.. வாக்களிக்க கடல் தாண்டி வரும் தமிழர்கள்! விண்ணைத் தொட்ட விமானக் கட்டணம்!
சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வாக்குப்பதிவை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. தேர்தலில் வாக்களிக்க ஏராளமானோர் தங்கள் ஊர்களுக்கு திரளத் தொடங்கியுள்ள நிலையில், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இன்று (ஏப். 23) நடைபெற உள்ளதால், வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால், சென்னையில் வேலை பார்த்து வரும் வெளியூர் வாசிகள் புதன்கிழமை பிற்பகல் முதலே சொந்த ஊர்களுக்கு புறப்படத் தொடங்கினர். இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
மக்கள் கூட்டம்
அதேபோல், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் அடையாறு பேருந்து நிலையம் போன்ற முக்கிய பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மதுரை, சேலம், காஞ்சிபுரம், வேலூர், கும்பகோணம், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் அதிகமாகக் காணப்பட்டனர்.
விமான நிலையத்தில் கூட்டம்
இதேபோல், வாக்களிப்பதற்காக சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பலர் விமானம் மூலமும் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால், சென்னை சர்வதேச விமான நிலையம் வழக்கத்தை விட அதிக நெரிசலுடன் காணப்பட்டது. புதன் மற்றும் வியாழக்கிழமைகளுக்கான பெரும்பாலான விமான டிக்கெட்டுகள் முன்கூட்டியே விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும், சில விமானங்களில் மட்டுமே டிக்கெட்டுகள் மீதமுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான கட்டணம் உயர்வு
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி விமான நிறுவனங்கள் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். சாதாரண நாட்களில் சென்னை-தூத்துக்குடி விமான கட்டணம் ரூ.5,354 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.17,527 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் சென்னை-மதுரை கட்டணம் ரூ.6,670 இலிருந்து ரூ.13,320 ஆகவும், சென்னை-திருச்சி ரூ.3,677 இலிருந்து ரூ.14,237 ஆகவும், சென்னை-கோவை ரூ.4,634 இலிருந்து ரூ.16,339 ஆகவும், சென்னை-சேலம் ரூ.3,319 இலிருந்து ரூ.12,027 ஆகவும் உயர்ந்துள்ளது. சில விமானங்களில் ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
வெளிநாடு வாழ் தமிழர்கள்
இதற்கிடையில், வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் தேர்தலில் வாக்களிக்க முன்கூட்டியே டிக்கெட்டுகளை பதிவு செய்து தமிழகத்துக்கு வந்துள்ளனர். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பக்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மட்டுமின்றி இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான தமிழர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். இவர்களில் பலர் முதல்முறையாக வாக்களிக்க வருவதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையம்
இதனால் கடந்த சில நாட்களாக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில், தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் போக்குவரத்து துறையில் அசாதாரண நெரிசல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.












Click it and Unblock the Notifications