அதிமுக மாநாட்டில் உப்பில்லாத சாம்பார் சாதம்! பச்சை வாடை புளி சாதம்! இதுக்கா பில்டப் கொடுத்தாரு மாஜி?
சென்னை: மதுரையில் நடந்து வரும் அதிமுக மாநாட்டில் வழங்கப்பட்ட சைவ சாப்பாட்டில் உப்பு சப்பில்லை என தொண்டர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவருக்கான செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் இன்றைய தினம் மதுரையில் மாநாடு நடத்தப்படுகிறது. அதிமுகவுக்கு பல்வேறு தருணங்களில் மதுரையில் நடத்தப்படும் மாநாடுகள் திருப்புமுனையை ஏற்படுத்தியிருந்தன.

திமுகவுக்கு திருச்சி.. அதிமுகவுக்கு மதுரை என சொல்லும் அளவுக்கு இந்த மாநாடுகள் டிவிஸ்ட்களை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதை கடந்த கால அரசியல் வரலாறுகளை பார்த்தால் தெரியும்.
மாநாடு என்றவுடன் தொண்டர்களுக்கான உணவு குறித்த கேள்விகள் எழுந்தன. அந்த வகையில் 10 ஆயிரம் சமையல் கலைஞர்கள் இணைந்து 10 லட்சம் பேருக்கு சமையல் செய்ய ஆயத்தமாகியிருந்தனர். இதற்காக 100 டன் அரிசி வரவழைக்கப்பட்டது. இந்த உணவு தொடர்பான விஷயங்களை மாஜி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்த்துக் கொண்டுள்ளார்.
இந்த மாநாட்டில் வெறும் சைவ சாப்பாடுதான். நிறைய கவுன்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு வரிசையில் நின்று சாப்பிட ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. லெமன் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம், பிரிஞ்சி சாதம் என மெனுக்களின் லிஸ்ட் வெளியாகின. எனவே 3 வேளையும் சாப்பாடு போடப்படுவதால் தொண்டர்களின் உணவு தேவைக்கு சிரமப்பட தேவையில்லை என்ற நிலை இருந்தது.
அசைவ உணவு இல்லையே என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கேட்ட போது வகை வகையாக சாப்பாடுகளை விட ருசி எப்படி இருக்கிறது என்பதுதான் முக்கியம். மாநாட்டுக்கு வருபவர்கள் திருப்தியாக சாப்பிடுகிறார்களா, நன்றாக இருக்கிறதா, சுவையாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம். மாநாட்டில் சுவையான சாப்பாடு போட்டாங்கனு பொதுமக்களும் தொண்டர்களும் பேச வேண்டும் என உணவு குறித்து செல்லூர் ராஜு பில்டப் கொடுத்தார்.
மேலும் அடிப்படை வசதிகளான கழிப்பறைகள் தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டன. இந்த நிலையில் அப்படியொரு பிரம்மாண்டமான மாநாடு காலை கொடியேற்றத்துடன் நடந்தது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வானில் பூமழைத் தூவ 51 அடி உயர கம்பத்தில் இருந்த அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். மாலைதான் மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் நடக்கின்றன.

அதுவரை மாநாடு நடக்கும் இடத்தில் கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. இந்த நிலையில் தலைசிறந்த தலைவராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்திட காரணம், கண் துஞ்சா கழகப் பணியா? மனம் துஞ்சா மக்கள் பணியா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்து வருகிறது. இந்த பட்டிமன்றம் முடிந்த நிலையில் மதிய உணவுக்காக தொண்டர்கள் வரிசையில் போய் நின்றனர்.
ஆசையாக சாம்பார் சாதம், புளி சாதம் உள்ளிட்ட உணவுகளை வாங்கினர். ஆனால் இவையெல்லாம் குப்பைக்கு போய்விட்டன. காரணம் கேட்டால் உப்பு சப்பில்லாத சாம்பார் சாதத்தை எப்படி சாப்பிடுவது, புளி சாதத்தில் பச்சை வாடை அப்படியே இருக்கிறது என்கிறார்கள். இதனால் ஒரு வாய் சாப்பிட்டதும் அப்படியே தூக்கி போட்டுவிட்டார்கள். பசியோடு இருந்த தொண்டர்களுக்கு உணவு விஷயம் பெரிய சொதப்பலாகவே தெரிகிறது.
இந்த மாநாட்டில் என்ன உணவு என்பது முக்கியமல்ல. சுவைதான் முக்கியம் என அடுக்குமொழி செல்லூரார் பேசியிருந்தார். ஆனால் இன்று தொண்டர்கள் மொட்டை வெயிலில் பசியுடன் இருந்து உப்பில்லாத சாப்பாட்டை வாங்கி அதிருப்திக்குள்ளாகினர். உப்பில்லா பண்டம் குப்பையிலே என சும்மாவா சொன்னார்கள்.












Click it and Unblock the Notifications